Show all

வியந்து பாராட்டுகிறார் சேவாக்! விளையாட்டு வீரர் நடராஜனுக்குச் சொந்த ஊர் முன்னெடுத்த வரவேற்பு கொண்டாட்டம் குறித்து

நடராஜன் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பை ஏற்றார். பொதுமக்கள் மற்றும் துடுப்பாட்டக் கொண்டாடிகள் குதிரைகள் பூட்டிய வண்டியில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதை கீச்சுவில் வியந்து பாராட்டியுள்ளார் சேவாக்.

09,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் ஆஸ்திரேலியாவிலிருந்து வெற்றி வாகை சூடி ஊர் திரும்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை புகழ்ந்துள்ளார். 

இதை அவர் கீச்சு மூலமாக, “இது தான் இந்தியா! இங்கே துடுப்பாட்டம் வெறும் விளையாட்டு மட்டுமல்ல. எங்களுக்கு துடுப்பாட்டம் அதுக்கும் மேல. நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் பெருத்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. என்ன ஒரு அற்புதமான கதை அவருடையது” என சேவாக் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். கூடவே நடராஜன் சாரட் வண்டியில் வலம் வரும் காணொளியையும் பகிர்ந்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.