Show all

தடகளப் போட்டியில் 12பதக்கங்களை வென்று வந்த தமிழக சிறுவர் சிறுமியர்!

மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட கூட்டமைப்புக் கோப்பை ஒன்றிய இளவல் தடகள வாகையர் போட்டியில் தமிழக அணிக்கு 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

15,தை,தமிழ்த்தொடராண்டு-5122: கூட்டமைப்புக் கோப்பை ஒன்றிய இளவல் தடகள வாகையர் போட்டியில் தமிழக அணிக்கு 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

18-வது கூட்டமைப்புக் கோப்பை ஒன்றிய இளவல் தடகள வாகையர் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.

இந்தப் போட்டியில் 15 சிறுவர்கள், 10 சிறுமிகள் ஆகியோர் அடங்கிய 25 பேர் கொண்ட தமிழக அணி பங்கேற்றது. தமிழக வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக இருந்தது.

தமிழக அணிக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 12 பதக்கங்கள் கிடைத்தன.

பம்பித் தாண்டலில் சித்ரவேலும், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்.சதீஷ் குமாரும், நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்டிரினும், 800 மீட்டர் ஓட்டத்தில் சிறிகிரணும், தங்கப்பதக்கம் பெற்றனர்.

இதில் பிரவீன் 16.01 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்தார். வீராங்கனைகளில் ஒருவர் மட்டுமே தங்கம் வென்றார். டிரிபிள் ஜம்ப்பில் பவிசா முதல் இடம் பிடித்தார்.

800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீரர் சிறிகிரண் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். உயரம் தாண்டுதலில் கெவினா அஸ்வினிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

10 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சதீஷ்குமார், 5 ஆயிரம் மீட்டரில் வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல நிசந்த் ராஜா (110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்) உள்பட 4 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.