Show all

படவரியில் (இன்ஸ்டாகிராம்) 25 கோடி தொடர்வோர்! யார் அந்தக் கிறிஸ்டியானோ ரொனால்டோ

படவரியில், உலகிலேயே அதிக தொடர்வோரைக் கொண்ட மாமனிதர் என்ற சாதனையைக் கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: படவரியில் (இன்ஸ்டாகிராம்) உலகிலேயே அதிக தொடர்வோரைக் கொண்ட மாமனிதர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

கால்பந்து உலகில் இந்தத் தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் தலைவரான இவர் மான்செஸ்டர் யுனெடெட், ரியல் மாட்ரிட் ஆகிய கழகங்களின் அணிகளுக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளார்.

தற்போது இத்தாலியின் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரைச் சமூக வலைத்தளங்களில் பின்தொடரும் கொண்டாடிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் படவரி (இன்ஸ்டாகிராம்) தொடர்வோர் எண்ணிக்கை 25 கோடியைக் கடந்துள்ளது. இதன் மூலம் 25 கோடி தொடர்வோர் கொண்டுள்ள ஒரே பேரறிமுகம் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

முப்பத்தியாறு அகவை, கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலிய கால்பந்து அணியான யுவெண்டஸ் அணிக்கு விளையாடிவரும் வீரர் ஆவார். கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவராவார். 

இவர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து ரியல் மட்ரிட்டுக்கு மாறிவந்த பொழுது இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அது மட்டுமன்றி இவர் ரியல் மட்ரிட்டுக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 6 ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, எசுப்பானியா நாட்டின் கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட்டில் இணைந்திருந்த போது, இவருக்கு ஆண்டுக்கு 143 கோடிகள் வருமானம் கிடைத்தது.

ரொனால்டோவிற்கு புகை மற்றும் குடிப்பழக்கங்கள் கிடையாது, காரணம் இவரது தந்தை இந்த காரணங்களால் இறந்ததாலே ரொனால்டோ இந்தப் பழக்கங்களை வெறுக்கின்றார். மற்றும் இவர் தனது உடலில் எவ்வித பச்சைகளும் (டேட்டுகள்) குத்திக்; கொள்ளுவதில்லை. காரணம் இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் குருதிக்கொடை அளிக்கும் பழக்கம் உள்ளவராம். 

படவரியில் அதிக தொடர்வோரைக் கொண்டவர் என்பது மட்டுமல்ல இவரின் சாதனை. கடந்த 12 மாதங்களில் ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் இருந்து 41.7 மில்லியன் டாலர் சம்பாதித்ததாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

அவரது சிறந்த போட்டியாளரான மெஸ்ஸியை விட 16 மில்லியன் டாலர் அதிகம் மற்றும் சமூக ஊடக மேடையில் உள்ள மற்ற பேரறிமுகங்களை விடவும் அதிகம் என்று தெரியவருகிறது. ரொனால்டோ தனது பக்கத்தில் ஒரு இடுகைக்கு 971,000 வசூலிப்பதான அசத்தல் செய்தியும் கேட்போரை, நம்பமுடியாமல் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.