Show all

நாட்டை ஆள யாருக்கு வாய்ப்பளிக்கப் போகிறது பாஜக தலைமை! குடும்பத் தலைவிக்கா? குடும்பத் தலைவருக்கா?

ஒரே தொகுதியில் போட்டியிட போட்டி போடும் இணையர்! யாரை தெரிவு செய்யப்போகிறது பாஜக? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில்.

09,தை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நாளது 28,தை (பிப்ரவரி 10) தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 26,மாசி (மார்ச் 10) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த கிழமை 107 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மேலும் 85 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில், சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சுவாதி சிங்கும் அவரது கணவர் தயாசங்கர் சிங் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இருவரும் இணைந்தனர். சுவாதி சிங் அமைச்சராக உள்ளார். தற்போது கணவன் மனைவியிடையே நிலவும் சிக்கலால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  

சரோஜினி நகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அமைச்சர் சுவாதி சிங் அந்த தொகுதியில் கருத்துப்பரப்புதலுக்கு பதாகைகள் சுவரொட்டிகளைத் தயார் செய்து வைத்துள்ளார். ஆனால் அவரது கணவரோ போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க மறுத்துள்ளார். கடந்த முறை நான் அவளைப் போட்டியிடச் செய்தேன், இந்த முறை நான் போட்டியிடுவேன் என்று தயாசங்கர் சிங் தெரிவித்துள்ளார். 

ஒரே தொகுதியை இருவர் கேட்கும் இருக்கை சிக்கலில் பாஜக திணறி வருகிறது. இந்நிலையில், கணக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்ற உத்தரப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,136.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.