Show all

சச்சின் பன்சால் வழக்கு! 12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நடைமுறைப்படுத்தல் துறை பதிலளிக்குமாறு உத்தரவு

12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி, சச்சின் பன்சால் குறித்து 3 கிழமைக்குள் நடைமுறைப்படுத்தல் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்அறங்கூற்ற மன்றம்.

18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் நடைமுறைப்படுத்தல் துறை மூன்று கிழமைகளில் பதிலளிக்குமாறு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக நடைமுறைப்படுத்தல் துறையின் குற்றஞ்சாட்டு எழுந்தது.

மேலும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக ப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உட்பட 9 பேருக்கு நடைமுறைப்படுத்தல் துறை கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, அதை ஏன் சந்திக்கக் கூடாது என்று அதற்கான உரிய விளக்கத்தை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த கவன அறிக்கையை எதிர்த்து, பிளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவராக இருந்த சச்சின் பன்சால் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை நடைமுறைப்படுத்தல் துறை இந்த கவனஅறிக்கையை அனுப்பியதால் இவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தை அணுகி இருந்தார்.

அந்த மனுவில் பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து தான் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலகி விட்டதாகவும் தனக்கும் தற்போது நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பலமுறை இதுகுறித்து நடைமுறைப்படுத்தல் துறை முன்பு அணியமாக விளக்கம் அளித்துள்ளதாக 12 ஆண்டுகள் கழித்து தற்போது கவனஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனவே கவனஅறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு அறங்கூற்றுவர் மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடைமுறைப்படுத்தல் துறை கடந்த 12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். சச்சின் பன்சால் குறித்து 3 கிழமைக்குள் நடைமுறைப்படுத்தல் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,995. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.