Show all

காஷ்மீரில் நேற்றும் இரண்டு படுகொலைகள்!

காஷ்மீரில் பரபரப்பு தொடரும் வகையில், மேலும் இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நேற்றும் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீரில் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின், வெளிமாநிலத்துத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

எனினும் பயங்கரவாதிகளின் இந்தப் படுகொலை நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் அங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

குல்காம் பகுதியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் அந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். இம்மூவருமே பீகாரை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

முன்னதாக, முந்தாநாள் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் இறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது தாக்குதலாக உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,040.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.