Show all

இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒன்றிய பாஜக முன்னெடுப்பில்! நேற்று பணமதிப்பிழப்பு. இன்று பணமாக்கல் தலைப்பில் சொத்து இழப்பு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய பாஜக அரசு, இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம் செய்து இந்திய மக்களுக்கு வரலாறு காணாத வேதனையையும், இந்தியாவிற்கு வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியையும் முன்னெடுத்தது இந்தியாவின் மறக்க முடியாத நினைவுகள் ஆகும். மீண்டும் தற்போது பணமாக்கல் என்ற தலைப்பில் செத்து இழப்பை கையில் எடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு என்பது உலகளாவிய அறிஞர்களின் பேசுபொருளாகியுள்ளது.

10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்’ செய்து இந்திய மக்களுக்கு வரலாறு காணாத வேதனையையும், இந்தியாவிற்கு வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியையும் முன்னெடுத்தது இந்தியாவின் மறக்க முடியாத நினைவுகள் ஆகும். 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். பொதுமக்கள் மட்டுமல்ல, உடன் அமைச்சர்களும் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தார்கள். நவம்பர் 8 ஆம் இரவு எட்டு மணிக்கு இன்று நள்ளிரவிலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தார்.

ஐம்பது நாட்கள் பொறுமையாக இருக்கச் சொன்னார். அவர் தனது பேச்சில், சகோதரர்களே மற்றும் சகோதரிகளே, நான் இந்த நாட்டினரிடம் 50 நாட்கள் கோருகிறேன். வெறும் 50 நாட்கள். எனக்கு டிசம்பர் 30 ஆம் தேதி வரை நேரம் தாருங்கள். நான் செய்தது தவறு அல்லது என் நோக்கம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள் என்றார்.

இது பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் என்று வர்ணித்தார். மேலும் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை என்றார்.

கொஞ்ச காலத்திற்குப் பின், பணமற்ற பரிவர்த்தனை மற்றும் எண்ணிம சமூகத்தை நோக்கிய பயணம் என்றார்.

எதற்காக பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டதோ அந்த லட்சியம் அடையப்படவில்லையென்று இரண்டு ஆண்டுகளில் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தந்த தரவுகளால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது 99.3 விழுக்காட்டு பணம் மீண்டும் வந்துவிட்டதாக இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துவிட்டது.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது, சுழற்சியில் 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும். அவற்றில் 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மீண்டும் வங்கிகளுக்கே வந்துவிட்டதாகவும், வெறும் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் மட்டுமே திரும்ப வரவில்லை என்றும் கூறியது இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி. இதிலும், அந்த சமயத்தில் நேபால் மற்றும் பூடானில் பயன்பாட்டில் இருந்த இந்திய ரூபாய் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியானால், மக்களிடம் கருப்புப் பணம் என்பது பண வடிவத்தில் இல்லை. மக்கள் கருப்புப் பொருளாதாரத்தை பணமாக வைத்திருப்பார்கள் என நினைப்பது முட்டாள்தனம் என்று தெரிவித்தார் பொருளாதாரப் பாடுகள் நிபுணர் ப்ரியா ரஞ்சன் தாஸ். பணமதிப்பு நீக்கம் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறும் அவர், இதனை இந்தியாவின் கருப்பு செயல் என்று வர்ணித்தார். பணமதிப்பு நீக்க செயலானது பொருளாதாரத்தை மோசமாக சிதைத்த துக்ளக்கின் அரசாட்சிக்கு ஒப்பானது என்று மேலும் தெரிவித்தார். 

தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே மாதிரியான ஒரு பொருளாதார முன்னெடுப்பை இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருக்கிறது. பணமாக்கல் என்று தலைப்பிடப்பட்டாலும் இது சொத்து இழப்பு வகைக்கானது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த அறிவிப்பை டெல்லியில் வெளியிட்டார். அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்குச் சொந்தமாகவும் பொதுத் துறை நிறுவனங்கள் வசமும் உள்ள 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன.

இதில் சாலைகள், தொடர்வண்டித்துறை, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளடங்கிய போக்குவரத்துக் கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், மின் பாதைகள், குழாய் பாதைகள், நிலங்கள், கட்டடங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

தனியாரிடம் அளிக்கப்படவுள்ள சொத்துகளில் 66 விழுக்காடு சாலைகள், தொடர்வண்டி, மின்சாரத் துறையைச் சேர்ந்ததாக இருக்கும். மீதமுள்ள 34 விழுக்காடு, விமான நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், துறைமுகங்கள் போன்றவையாக இருக்கும்.

சாலைகளைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் எஞ்சிய பாஜக ஆட்சி காலத்திற்குள் 1.6 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 26,700 கி.மீ தூரமுள்ள சாலைகள் இதற்குப் பயன்படுத்தப்படும். இது, இந்தியாவில் உள்ள ஒன்றிய நெடுஞ்சாலைகளில் 22 விழுக்காடு ஆகும்.

முதல் கட்டமாக ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களில் உள்ள 586 கி.மீ. நீளமுள்ள ஒன்றிய நெடுஞ்சாலைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

தொடர்வண்டித்துறையைப் பொருத்தவரை சில தொடர்வண்டி நிலையங்கள், சில பாதைகள், பயணிகள் தொடர்வண்டிகள், கொங்கண் தொடர்வண்டிப் பிரிவு ஆகியவற்றை குத்தகைக்கு விடுவதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 1,52,496 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்த நிதியாண்டில் 17,810 கோடி ரூபாய் திரட்டப்படும். அடுத்த நிதியாண்டில் 57,222 கோடி ரூபாய் திரட்டப்படும்.

மொத்தமாக 400 தொடர்வண்டி நிலையங்கள், 90 பயணிகள் தொடர்வண்டிகள், கொங்கண் ரயில்வேயின் 741 கி.மீ. நீளமுள்ள வழித்தடம், 15 தொடர்வண்டி அரங்கங்கள், சில தொடர்வண்டிக் குடியிருப்புகள், தொடர்வணடித் துறைக்குச் சொந்தமான 265 சேமிப்புக் கிடங்குகள், 4 மலை தொடர்வண்டிகள் ஆகியவை குத்தகைக்கு விடப்படவுள்ளன. இப்படி குத்தகைக்கு விடப்படும் மலை தொடர்வண்டியில் நீலகிரி மலை தொடர்வண்டியும் அடங்கும்.

விமான போக்குவரத்துத் துறையைப் பொருத்தவரை, இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள 25 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். இதன் மூலம் 20,782 கோடி திரட்டப்படும்.

இதுதவிர, மும்பை,டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களில் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு உள்ள பங்குகள் விற்பனை செய்யப்படும். மும்பை, டெல்லி விமான நிலையங்களில் 26 விழுக்காடு பங்குகளும் ஹைதராபாத், பெங்களூரு விமான நிலையங்களில் 13 விழுக்காடு பங்குகளும் தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு உள்ளன.

மொத்தமாகப் பார்த்தால், இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள சொத்துகளில் 18 விழுக்காடு தற்போது விற்கப்படுகிறது. முதல் கட்டமாக, திருச்சி விமான நிலையம் 2022லும் கோயம்புத்தூர், மதுரை விமான நிலையங்கள் 2023லும் சென்னை விமான நிலையம் 2024லும் தனியாருக்கு விடப்படும்.

அதேபோல மின்துறையைப் பொருத்தவரை, 2025க்குள் 45,200 கோடி ரூபாயைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. இந்திய பவர் கிரிட் நிறுவனத்துக்கு சொந்தமான மின்தொடரமைப்புச் சொத்துகளில் 400 கிலோ வாட்டுக்கு மேம்பட்ட திறன் கொண்ட மின்னுற்பத்தி சொத்துகள் தனியார்மயமாக்கப்படும். ஒட்டுமொத்தமாக 28,608 சர்க்யூட் கிலோ மீட்டர் நீளமுள்ள மின் தொடரமைப்பு தனியார்மயமாக்கப்படும்.

சுரங்கங்களைப் பொருத்தவரை, 28,747 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 நிலக்கரி சுரங்கங்கள் 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விடப்படும். தொலைதொடர்புத் துறையைப் பொருத்தவரை 2024ஆம் ஆண்டிற்குள் 35,100 கோடி ரூபாயைத் திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பாரத் நெட் திட்டத்தின் கீழ் போடப்பட்ட 2.86 லட்சம் கி.மீ நீளமுள்ள ஒளிநார் வடங்களும் இதில் அடங்கும்.

இதேபோல சஞசய் நிகருக்குச் சொந்தமான 13,567 செல்பேசி கோபுரங்களும், எம்டிஎன்எல்லுக்குச் சொந்தமான 1,350 செல்பேசி கோபுரங்களும் தனியார்மயமாக்கப்படவுள்ளன. இதன் மூலம் 8,800 கோடி ரூபாய் திரட்டப்படும். ஒட்டுமொத்தமாக இந்திய அரசு திரட்ட நினைத்திருக்கும் 6 லட்சம் கோடி ரூபாயில் 6 விழுக்காடு தொலைதொடர்புத் துறையில் இருந்து திரட்டப்படும்.

கப்பல் போக்குவரத்துத் துறையைப் பொருத்தவரை அடுத்த நான்கு ஆண்டுகளில் 12,828 கோடி ரூபாய் திரட்டப்படும். இதற்காக இந்தியாவில் உள்ள 12 மிகப் பெரிய துறைமுகங்களில் 9 துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்படும்.

இந்திய உணவுக் கழகம், இந்திய சேமிப்புக்கிடங்குக் கழகங்களுக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளைத் தனியார்மயமாக்குவதன் மூலம் 28,900 கோடி ரூபாய் திரட்டப்படும்.

இவை தவிர,டெல்லியில் உள்ள பல குடியிருப்புகள், எட்டு ஐடிடிசி உணவகங்கள் ஆகியவற்றையும் குத்தகைக்கு விடுவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 15,000 கோடி ரூபாய் திரட்டப்படும். புதுச்சேரியில் உள்ள உணவகம் பாண்டிச்சேரி, புவனேஸ்வரில் உள்ள உணவகம் கலிங்கா, ராஞ்சியில் உள்ள உணவகம் ராஞ்சி, பூரியில் உள்ள உணவகம் நிலாச்சல், ரூப்நகரில் உள்ள உணவகம் அனந்த்பூர் சாஹிப், புது டெல்லியில் உள்ள உணவகம் சாம்ராட், உணவகம் அசோக், ஜம்முவில் உள்ள உணவகம் ஜம்மு அசோக் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் மயமாக்கப்படும்.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஒன்றிய விளையாட்டு அரங்கமும் மாநில விளையாட்டு அரங்கங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தனியார்மயமாக்கப்படும். இதன் மூலம் 11,450 கோடி ரூபாய் திரட்டப்படும்.

கொரானாவின் தாக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து நாட்டின் வருவாய் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதான இயற்கையான நிகழ்வைத்தாண்டி, கொரோனாவை உரிய முறையில் கட்டுப்படுத்த முயலாதது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்குசேவை வரியின் நடைமுறைப்பாடு போன்றவை ஒன்றிய பாஜக அரசின் அடாவடித்தனத்தின் பாற்பட்ட நாட்டின் வருவாய் வெகுவாகக் குறைந்து போனதற்கான காரணம்  ஆகும்.

இதனால் வரி வருவாயை அதிகரிக்க பெட்ரோலியப் பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு அதனால், நுகர்வு குறைய ஆரம்பித்தது. இதனால், வரி வருவாய் மேலும் குறைய ஆரம்பித்தது. அரசு தனது அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2020ல் அரசின் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.4 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

இவர்கள் குத்தகைக்கு விடுவதாகச் சொல்லும் சொத்துகள் எதுவும் அரசின் சொத்துகள் கிடையாது. பொதுத்துறை நிறுவனங்களினுடையது. உதாரணமாக கெய்லை எடுத்துக்கொள்வோம். இதில் தனியாரும் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். அப்படியானால், இதன் சொத்துகள் குறித்து முடிவெடுக்க இயக்குநர் குழுவை கூட்டி இந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படியே சொத்துகள் விற்கப்பட்டாலும், அவை அந்தப் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் அவற்றின் பங்குதாரர்களுக்கும்தாம்; சேரும். அரசுக்கு அதன் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் பணம் கிடைக்கும் எனச் சுட்டிக்காட்டுகிறார் பொருளாதார அறிஞர் ஆனந்த் சீனிவாசன்.

பிஎஸ்என்எல் நிறுவனம். அதன் ஊழியர்களுக்கே நிறைய பாக்கி வைத்திருக்கிறது. ஓய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கவில்லை.

கொண்டுதருவோர்களுக்கும் பணம் பாக்கி இருக்கிறது. பிஎஸ்என்எல் கோபுரத்தை வாடகைக்கு விட்டு பணம் கிடைத்தால் அது எப்படி அரசுக்குச் செல்லும்? ஏற்கெனவே பாக்கி இருப்பவர்களுக்குத்தானே போகும் என கேள்வி எழுப்புகிறார் ஆனந்த்.

தொடர்வண்டித்துறையைப் பொருத்தவரை, புதிய தொடர்வண்டிகளை விடுவதற்கு தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்று நடத்த யாரும் முன்வரவில்லை. ஒன்றிய அரசின் ஐஆர்டிசியே தொடர்வண்டியை விடச் செய்தார்கள். அதில் யாரும் பயணம் செய்யவில்லை. முடிவாக சரக்கு வண்டிகள் மட்டும்தான் குத்தகைக்குச் செல்லும். அதை குத்தகைக்கு விடுவதற்கு பதிலாக அரசே, வாடகைக்கு விட்டு பணம் திரட்டலாமே, என்கிறார் ஆனந்த்

பணம் திரட்டுவதைத் தவிர, இதில் ஒன்றிய பாஜக அரசுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன என்கிறார் அவர். அதாவது அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அரசின் சொத்துகளைத் தாரைவார்க்கவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது, என்கிறார் அவர்.

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைவதற்கு முன்பாக அதானி நிறுவனத்திடம் எந்த விமான நிலையமும் கிடையாது. இப்போது 51 விமான நிலையங்கள் அவர் பொறுப்பில் இருக்கின்றன. மீதமுள்ள விமான நிலையங்களையும் அதானியிடம் கொடுக்கத்தான் இதைச் செய்கிறார்கள் என்கிறார் ஆனந்த்.

இந்த திட்டத்தின் மூலம் பெரிய அளவில் நிதியைத் திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தாலும், சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்ட பிறகு எந்த அளவுக்கு தனியார் இந்த சொத்துகளை மேம்படுத்துவார்கள் என்ற சந்தேகமும் நிபுணர்களிடம் இருக்கிறது. காரணம், இந்தத் தனியார்மயமாக்கத் திட்டத்தின் கீழ், சொத்துகளின் உரிமை தனியாருக்குத் தரப்படமாட்டாது. பயன்படுத்தும் உரிமை மட்டுமே தரப்படும். ஆகவே, அந்த சொத்துகளில் தனியார் எந்த அளவுக்கு முதலீடு செய்து அவற்றை மேம்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறிதான். இந்த திட்டம் நாட்டின் சொத்து இழப்புக்கான வழியாகவே அமையும்.

இந்த அளவுக்கு இந்தச் சொத்துகளில் முதலீடு செய்ய தனியார் முன்வந்தாலும், அவர்கள் அந்தத் தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்றே முதலீடுசெய்யக்கூடும். இந்த இடங்களைக் குத்தகைக்குப் பெறுவதன் மூலம் கிடைக்கும் லாபம், இந்தக் கடனுக்கான வட்டியைவிட அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் முதலீடு செய்ய தனியார் ஆர்வம் காட்டுவார்கள். அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிதான் தெரியவரும்.

இதெல்லாம் தவிர, இந்தப் பணத்தைவைத்து ஒன்றிய அரசு என்ன திட்டங்களைச் செயல்படுத்தப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தனது கடன்களைத் திரும்பச் செலுத்தப்போகிறதா, புதிய கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடுசெய்ய ஒன்றிய பாஜகவிடம் என்ன திட்டம் இருக்கமுடியும். ஆக இது பணமாக்கல் திட்டமல்ல; இந்தியச் சொத்துக்கள் இழப்பை முன்னெடுப்பதற்கான பிழையான நோக்கம் சார்ந்தது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.