Show all

வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடியது என்கிற தமிழ்ச்சொலவடை போல! வட இந்திய ஊழியரின் குட்டு வெளியானது.

சென்னை திருவான்மியூர் பறக்கும் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு விற்பனையில் பணியாற்றுபவர் வட இந்திய ஊழியர் டீக்காராம். இவர் அரங்கேற்றிய நாடகத்தில் அவர் மனைவிதான் சண்டியர்.

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை திருவான்மியூர் பறக்கும் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு விற்பனையில் பணியாற்றுபவர் டீக்காராம். இவரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டி போட்டு ரூ 1.32 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து திருவான்மியூர் தொடர்வண்டித்துறை காவல்துறையினர், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க துணை ஆய்வாளர்கள் வைரவன், சாலினி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடர்வண்டித்துறை ஊழியர் டீக்காராமிடம் கொள்ளை எப்படி நடந்தது என காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது தனது பயணச்சீட்டு விற்பனை அறைக்கு மூன்று பேர் வந்ததாகவும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தனது கை, கால்களை கட்டி போட்டு கொள்ளையடித்துவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வு அதிகாலை நேரத்தில் நடந்ததால் பயணிகளின் நடமாட்டமும் இல்லை. அதனால் தொடர்வண்டி நிலையத்தின் அருகில் உள்ள கண்காணிப்புப் படக்கருவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போதுதான் டீக்காராமின் மனைவி அந்த அதிகாலை நேரத்தில் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து டீக்காராமிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மனைவி தொடர்வண்டி  நிலையத்திற்கே வரவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து டீக்காராமிடம் படக்கருவி காட்சிகளை போலீஸார் காண்பித்தனர். அப்போது அவர் பதட்டமடைந்து எதை எதையோ உளறினார். இதையடுத்து டீக்காராமை காவல்துறையினர் சிறப்பு வகையில் விசாரித்தனர்.
அப்போது அவர் நிலையத்துக்கு தனது மனைவி வந்ததை ஒப்புக் கொண்டார். அதன்பின்னர்தான் இந்த வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இயங்கலை ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் பணத்தேவையை நிறைவு செய்ய இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது. 

1.32 லட்சம் ரூபாயை மனைவியிடம் கொடுத்துவிட்டு தன்னை அவரைவிட்டே கட்டி போட்டுவிட்டு செல்லும் படியும் டீக்காராம் சொன்னதை காவல்துறையிடம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,118.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.