Show all

அரசாட்சியில் அடாவடிகளையே முன்னெடுத்துவரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம்!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி, அரசாட்சியில் அடாவடிகளையே முன்னெடுத்துவரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: அரசாட்சியில் அடாவடிகளையே முன்னெடுத்துவரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றன.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு,  ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சீர்திருத்த சட்டங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு சட்டங்களை விலக்கிக் கொள்ள மறுப்பது, போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று, அமைதியான முறையில் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றன. அதன்படி, வீட்டின் முன்பு நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி போராடவுள்ளனர்.

பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள், காணொளிக்காட்சி வழியாக நடத்திய கூட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு குறித்தும், விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாகவும், ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ள மறுப்பது, குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் பத்து நாட்களுக்கு  பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் முதல் நாளாக இன்று காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது.

அதன்படி, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இராஷ்ட்ரிய காங்கிரஸ் தமிழ்நாடு கிளையின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆகியோர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.