Show all

உச்சஅறங்கூற்றுமன்றம்! வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உத்தரவு தொடரும்

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துள்ளது உச்சஅறங்கூற்றுமன்றம்

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சஅறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்தது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர்அறங்கூற்றுமன்றக் கிளையில் பல்வேறு அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த மதுரை உயர்அறங்கூற்று மன்றம், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தை களைந்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்பு தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நாளது 30,ஐப்பசியில் (நவம்பர்16) மேல்முறையீடு செய்தது. அதே போல் பாமக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மனுபதிகை செய்தனர்.

இந்த வழக்கு இன்று உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்  நாகேஸ்வரராவ் தலைமையிலான மூன்று அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் தமிழ்நாடு அரசு சார்பில் அணியமான மூத்த வழக்கறிஞர் குமணன் வாதாடுகையில், இந்தப்பாட்டில் உடனடியாக மதுரை உயர்அறங்கூற்று மன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். உயர்அறங்கூற்று மன்ற கிளை தடை உத்தரவால் ஏற்கனவே கலந்தாய்வு பாதிக்கப்பட்டு இருக்கிறது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது கொடுக்க இயலாமல் இருக்கிறது என்றார்.

இந்த வழக்கில் வன்னியர்களுக்கான 10.5 விழுக்காட்டு உள்ஒதுக்கீட்டை களைந்து மதுரை உயர்அறங்கூற்றுமன்றக் கிளை விதித்த தீர்ப்புக்கு உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் தடை விதிக்க மறுத்தனர்.

அறங்கூற்றுவர்கள் கூறும்போது, 'இந்த வழக்கில் அதிகமான மனுக்கள் பதிகை செய்யப்பட்டு இருக்கிறது. எழுத்து மூலமாக வாதங்களை நீங்கள் பதிகை செய்யுங்கள். தற்போதைய சூழ்நிலையில் இந்த 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு களைவுப்பாட்டில் நாங்கள் இடைக்கால தடை விதிக்க விரும்பவில்லை.

மதுரை உயர்அறங்கூற்றுமன்றக் கிளை தீர்ப்பு தொடரும். அடுத்த கட்ட விசாரணை நாளது 03,04,மாசியில் (பிப்ரவரி15 மற்றும்16) நடைபெறும். அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்.

குறிப்பாக புதிய பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவை இந்த இடஒதுக்கீட்டில் நடைபெறக்கூடாது. ஏற்கனவே 10.5 விழுக்காட்டு இடஒதுக்கீட்டில் நடந்த மாணவர் சேர்க்கை நியமனத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்றனர். மேலும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்கவும் அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,099.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.