Show all

அணை பாதுகாப்பு சட்டமுன்வரைவு! ஒன்றிய பாஜக அரசின் மாநில அதிகாரங்கள் பறிப்பு வரிசையில்

பாஜகவே இனி இந்தியாவில் நிரந்தர ஆட்சிக்;கு பத்திரம் எழுதி வாங்கியதைப் போல ஒன்றியத்தில் அதிகாரத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறது. அந்த வரிசையில் இன்று ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த சட்டமுன்வரைவு அணை பாதுகாப்பு குறித்ததாகும். 

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்- தமிழ்ப்பெண்கள் அஞ்சறைப் பெட்டியில் சேமித்த பணத்தை வெளியேற்றி, பாமரமக்களின் பணத்தின் மீதான அதிகாரத்தை பிடுங்கியது தொடங்கி- சரக்கு சேவைவரி, நீட், ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை இப்படி மாநில மக்களின் அதிகாரங்களை- சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றி ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொண்டு, பாஜகவே இனி இந்தியாவில் நிரந்தர ஆட்சிக்;கு பத்திரம் எழுதி வாங்கியதைப் போல ஒன்றியத்தில் அதகாரத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறது. அந்த வரிசையில் இன்று ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த சட்டமுன்வரைவு அணை பாதுகாப்பு குறித்ததாகும்.  

இந்த நிலையில்- மாநில அரசின் அதிகாரங்களுக்கு எதிரான அணைப் பாதுகாப்பு சட்டமுன்வரைவை ஒன்றிய பாஜக அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த வகைக்கு- தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணைப் பாதுகாப்பு சட்டமுன்வரைவை ஒன்றிய பாஜக அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும்- இப்போது ஆளுங்கட்சியாகவும் இந்தச் சட்டமுன்வரைவை கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.

'அணைப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றக் கூடாது' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது, ஒருமனதாக ஆதரித்துள்ளோம். அதையும் மீறி, 2.8.2019 அன்று இந்தச் சட்டமுன்வரைவை ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களவையில் கொண்டு வந்தபோது, அதில் பங்கேற்றுப் பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா  அவசரகதியில் கொண்டு வரப்பட்டுள்ள அணைப் பாதுகாப்பு சட்டமுன்வரைவு என்பது அரசியல் சட்டம் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான கடும் தாக்குதல். ஆகவே, இந்தச் சட்டமுன்வரைவை திரும்பப் பெறுங்கள் என எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்நிலையில், நேற்று இந்தச் சட்டமுன்வரைவு மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டபோது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா  மக்களாட்சி, கூட்டாட்சித் தத்துவத்தின்கீழ் இயங்குவதுதான் நமது அரசியல் சட்டத்தின் சிறப்பம்சம். ஆனால் இந்தச் சட்டமுன்வரைவு மாநில அரசுகளிடம் உள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் அதிகாரங்களைப் பறித்து, ஒன்றிய அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தை அளித்து விடும்' என்று தெரிவித்திருந்தார்.

அணைகள் மாநிலத்தினுடையவை. எனவே அவற்றின் பாதுகாப்பும் எங்களுடையது. ஆனால் இந்தச் சட்டமுன்வரைவு அரசியல் சாசனத்தின் விதி 252-ஐ மீறுவதாக உள்ளது. அணைப் பாதுகாப்பு என்பதைவிட மாநில அரசுகளின் அதிகாரப் பாதுகாப்பே இப்போது கேள்விக்குரியதாகியுள்ளது' என்று பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் அடுக்கடுக்கான வாதங்களை எடுத்து வைத்து இந்தச் சட்டமுன்வரைவை தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பிட வேண்டும் என எடுத்துரைத்தார். 

தி.மு.க. சார்பில் இந்தச் சட்டமுன்வரைவை மாநிலங்களவையின் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று திருச்சி சிவா திருத்தம் கொடுத்து, அந்தத் திருத்தத்தின் மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இந்தத் திருத்தத்தை மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ளன. குறிப்பாக அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஆதரித்த நிலையில், தங்களுக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி- அணைப் பாதுகாப்புச் சட்ட மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டியதில்லை என்று முடிவு செய்து-  இந்த அணைப் பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருப்பது 'ஒன்றிய, மாநில அரசுகளுக்கு' இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாகவே அமைந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறேன்.

தி.மு.க. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், மக்களாட்சி- நாடாளுமன்ற மரபுகளுக்கோ, இவற்றைக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திற்கோ துளியும் மதிப்பளிக்காமல் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது. மக்களாட்சிக்கு ஆபத்தானது. மாநிலங்களில் உள்ள மக்கள் நாடாளுமன்றத்தில் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு மாநிலங்களுக்கு எதிராகவே சட்டமியற்றி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு தமது அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,086.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.