என்ன ஆச்சு! இலங்கையின் காற்று இங்கேயும் வீசத் தொடங்கி விட்டதா என்று சமூக ஆர்வலர்கள் அஞ்சும் அளவிற்கு, இரண்டு கிழமைகளில் பனிரெண்டாவது முறையாக ரூபாய் எட்டுவரை பெட்ரோல் விலையேற்றப்பட்டுள்ளது. 21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகிய எரிபொருட்கள் விலையை அன்றாடம் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதற்கிடையில், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களை ஒட்டி கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்தது பெட்ரோல், டீசல். இதன்பிறகு இரண்டு கிழமைகளாக தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இடையில் இரண்டே மட்டும் தவிர்த்து ஏனைய பனிரெண்டு நாட்களும் எரிபொருள் விலை உயர்ந்து வருவது வண்டி ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.34க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலையும் லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்து ரூ.99.42க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 14 நாட்களில் பெட்ரோல் ரூ.7.94, டீசல் ரூ.7.99 அதிகரித்துள்ளது வண்டி உடைமையாளர்களுக்கும், வண்டி ஓட்டிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலையேறிவருவதால், கட்டாயத்தேவைப் பொருட்களின் விலையும் தங்களின் பயண செலவும் ஒருசேர அதிகரிப்பதாக மக்கள் வேதனையுடன் கூறி வருவதை பார்க்க முடிகிறது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டிலும் எழுபது ஆண்டுகள் காணாத விலையேற்றத்தை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் காணும் அவ்வளவு விலையேற்றத்தை இந்தியாவுக்குப் பொருத்த முடியாது என்றாலும், விரலுக்கேற்ற வீக்கம் என்பதாக, மதவாத ஆதிக்க அளவிற்கு பாதிப்பு இந்தியாவிலும் தொடங்கிவிட்டது என்றே கருதத் தோன்றுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,208.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.