Show all

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்! உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறைக்கு தமிழ்நாடு சேர்க்கப்பட வேண்டும்

வெளிமாநிலத்தவர் குடியேற்றங்களைத் தடுக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறையை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு மற்றும் காஷ்மீர் மன்னராட்சிப் பகுதியை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு மற்றும் காஷ்மீர் மன்னராட்சிப் பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் மன்னராட்சிப் பகுதியை இந்தியாவுடன், இந்திய விடுதலைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு இணைக்க சம்மதித்தார். மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிக்கும் மக்களுக்கும் சில சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் பல மாநிலங்கள் இந்தச் சிறப்புத் தகுதியைக் கண்டு பொறாமைப் பட்டார்களே அன்றி, தங்கள் மாநிலத்திற்கும் இந்தவகைச் சிறப்புத்தகுதியை மன்னர் ஹரிசிங் போல கேட்டுப்பெற வேண்டும் என்கிற விழிப்புணர்வை எந்த மாநிலமும் எய்திடவில்லை. ஒருவழியாக பாஜக ஆட்சியில் அந்த சிறப்புத்தகுதியும் பிடுங்கப்பட்டு விட்டது.

இதே போன்று இந்தியாவின் சில மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேறொரு சிறப்புத்தகுதி உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறை (இன்னர் லைன் பெர்மிட் முறை) என்பதாகும். உள்நாட்டு அனுமதிச் சீட்டு, இந்தியக் குடிமக்கள், இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் போன்ற மாநிலங்களில் சுற்றுலா மற்றும் வேலை காரணமாக செல்பவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் எல்லைச் சோதனைச் சாவடிகளில் மற்றும் விமான நிலையங்களில் மாநிலத்தில் உள்நுழைவதற்கு அனுமதிச் சீட்டு வழங்குவர். இதன் அனுமதிக் காலம் ஏழு நாட்கள் வரை இருக்கும். தேவைப்பட்டால் 15 நாட்கள் வரை நீட்டிப்பர். இந்த அனுமதிச் சீட்டு லடாக் பகுதிகளுக்குப் பயணிக்கும், லடாக்கியர் அல்லாத அனைத்து மாநில இந்தியர்களுக்கும் பொருந்தும்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், வடகிழக்கு மாநிலங்கள் அல்லது லடாக் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசின் உள்நுழைவு அனுமதிச் சீட்டு பெறவேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் குறுகிய காலச் சுற்றுலாச் செல்வோருக்கும், அப்போது நீண்டகாலம் தங்கி பணிபுரிபவர்களுக்கும் இரண்டு வகையான நுழைவுச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

பிரித்தானிய இந்திய ஆட்சியில், இந்திய விடுதலைக்கு 74 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகக் கருதப்பட்டன. எனவே அப்பகுதிகளுக்குச் சுற்றுலாச் செல்லும் பிற மாநிலங்களின் இந்தியக் குடிமக்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு அரசின் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. இந்த அடிப்படையே தற்போதைய உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறைக்கான சட்ட அடிப்படை ஆகும்.

தற்போதைய பாஜக ஒன்றிய ஆட்சியில் -ஹிந்தி, ஹிந்துத்துவாவைக் கொண்டாடும் வகைக்கு, ஹிந்தி, ஹிந்துத்துவா, ஹிந்தி பேசும் கூலித்தொழிலாளர்கள் பரவல் ஆகியவற்றை இந்தியா முழுக்க முன்னெடுக்கும் வகைக்கு ஒரேநாடு ஒரேகுடும்ப அட்டை போன்ற, பற்பல சட்டதிட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

இந்த நிலையில்தாம், ஒன்றிய பாஜக அரசின்- ஹிந்தி, ஹிந்துத்துவா, ஹிந்தி பேசும் கூலித்தொழிலாளர்கள் பரப்புதலைத் தடுக்கும் வகைக்கு- 370 சிறப்புத் தகுதியில் கோட்டைவிட்ட மாநிலங்கள்- இந்தியாவின் சில மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேறொரு சிறப்புத்தகுதியான 'உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறை'யைத் தூக்கிப்பிடித்து போராடும் வகைக்கு களம் கண்டு வருகின்றன.

வெளிமாநிலத்தவர் குடியேற்றங்களைத் தடுக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறையை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில் - வணிக நிறுவனங்களைத் தொடங்கிட தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. வெளிமாநிலத்தவர் சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும். வெளி மாநிலத்தவருக்கு உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறை வழங்கும் பட்டியலில் தமிழ்நாடு சேர்க்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதேகோரிக்கையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனும் வலியுறுத்தி உள்ளார். 

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரித்தானிய இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறை இந்திய விடுதலைக்குப் பின்னரும் சில மாற்றங்களுடன் ஒன்றிய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவுகளில் நீண்டகாலமாக உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் மாநிலமும் உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறை தேவைப்படும் மாநிலங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உள்நாட்டு அனுமதி சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. 

ஒன்றிய பாஜக அரசு 2 ஆண்டுகளுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்த சட்டமுன்வரைவைக் கொண்டு வந்தது. அதற்கு  எதிராக அஸ்ஸாமில்தான் உக்கிரமான போராட்டம் வெடித்தது. இதற்கு காரணமே 36 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு உருவாக்கிய அஸ்ஸாம் ஒப்பந்தத்தை குடியுரிமை திருத்த சட்டம் மீறிவிட்டது என்பதுதான். 

அதாவது அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்பது அஸ்ஸாம் ஒப்பந்தம். ஆனால் தற்போதைய  பாஜக ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தமானது கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்றது. இது தங்களுக்கு ஒன்றிய அரசு அளித்த உறுதி மொழியை மீறுவதாகவும் எனக் கூறியே அஸ்ஸாமில் போராட்டம் வெடித்தது. 

குடியுரிமை திருத்த சட்டப்பாட்டின் போது, உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறை முறையும் விவாதிக்கப்பட்டது. அதாவது உள்நாட்டு அனுமதி சீட்டு முறை நடைமுறையில் உள்ள மாநிலங்களுக்கு குடியுரிமை சட்ட திருத்த சட்டமுன்வரைவு பொருந்தாது. குடியுரிமை சட்ட திருத்த சட்டமுன்வரைவு இந்த மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது. அப்போதும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் உள்நாட்டு அனுமதி சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் என பாஜக ஒன்றிய அரசு உறுதி அளித்தது. 

இந்த உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறையைத் தான் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு அரசு முதலில் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். தமிழர் அல்லாதவர்- வெளி மாநிலத்தவர் என்பதற்கான வரையறை என்ன? பிற மொழி பேசுகிறவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தவரா? அல்லது தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளித்துவிட்டு வட இந்தியர்கள் மட்டும் வெளிமாநிலத்தவர் என வரையறைக்கப்படுவார்களா? எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் குடியேறிய பிற மாநிலத்தவரை வெளி மாநிலத்தவர் என வரையறுப்பது? இந்த வரையறை செல்லக் கூடியதாக இருக்குமா? என பல கேள்விகள் உள்ளன. 

ஆகையால் இது தொடர்பாக முழுமையாக விவாதங்களும் ஆலோசனைகளும் நடத்தி அதன்பின்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான சட்டம் நிறைவேற்ற வேண்டும். இந்த சட்டத்திற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலையும் பெற வேண்டும். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் மணிப்பூர் மாநில சட்டமன்றத்தில் உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறைக்கு ஒரு சட்டமுன்;வரைவு நிறைவேற்றபப்ட்டது. மணிப்பூர் மாநிலத்துக்குள் நுழைய உள்நாட்டு அனுமதி சீட்டு தேவை என்கிற நடைமுறையை ஒன்றிய அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தமிழ்நாட்டுக்கு உள்நாட்டு அனுமதி சீட்டு நடைமுறை தேவை என்கிற கருத்துப்பரப்புதலை சிறப்பாக முன்னெடுத்து இந்தக் கோரிக்கையில் வாகை சூடுவோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,049.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.