Show all

இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 5 மாநிலங்களிலும் 1,200க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. 

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்திற்கு பதினேழு நாட்களுக்கு முன்பு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. 

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்திற்கு இருபத்தி நான்கு நாட்களுக்கு முன்பு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

40 இடங்களைக் கொண்ட கோவா சட்டமன்றத்திற்கும் இருபத்தி நான்கு நாட்களுக்கு முன்பு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பும் ஐந்து நாட்களுக்கு முன்புமாக 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. 

இத்தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. 5 மாநிலங்களிலும் சுமார் 1,500க்கும் அதிகமான இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகளில் சுமார் 50,000 தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். முதல் கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், ஆளும் பாஜக ஆகியவை முதன்மையான கட்சிகள். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலிதளம், பாஜக கூட்டணி களத்தில் உள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஆளும் பாஜக  இடையே போட்டி நிலவுகிறது. மணிப்பூரில் காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி, நாகா மக்கள் முன்னணி, மக்கள் தேசிய கட்சி, பாஜக களத்தில் நிற்கின்றன. கோவா மாநிலத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, ஆளும் பாஜக ஆகியவை களம் காண்கின்றன.

403 தொகுதிகளைக் கொண்ட உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற 59 இடங்கள் பெற வேண்டும். 70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் 5 மாநிலங்களில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்: உத்தரப்பிரதேசம்: பாஜக 39.67விழுக்காடு 312 இடங்கள், பகுஜன் சமாஜ் 22.23விழுக்காடு 19 இடங்கள்; சமாஜ்வாதி கட்சி 21.82விழுக்காடு 47 இடங்கள்; காங்கிரஸ் 7 முதல்வர்: யோகி ஆதித்யநாத்

பஞ்சாப்: காங்கிரஸ்- 38.5விழுக்காடு 77 இடங்கள்; அகாலி தள்- 25.4விழுக்காடு 15 இடங்கள்; ஆம் ஆத்மி- 23.72விழுக்காடு 20 இடங்கள்; பாஜக 5.39விழுக்காடு 3 இடங்கள்.
தற்போதைய முதல்வர் - சரண்ஜித்சிங் சன்னி

உத்தரகாண்ட்: பாஜக- 46.51விழுக்காடு 56 இடங்கள்; காங்கிரஸ்- 33.49விழுக்காடு 11 இடங்கள்; தற்போதைய முதல்வர்- புஷ்கர் சிங் தாமி

மணிப்பூர்: பாஜக -36.2விழுக்காடு 21 இடங்கள்; காங்கிரஸ் 35.1விழுக்காடு 28 இடங்கள்; நாகா மக்கள் முன்னணி 7.1விழுக்காடு தேசிய மக்கள் கட்சி 5விழுக்காடு தற்போதைய முதல்வர் பைரேன்சிங்

கோவா: பாஜக 32.5விழுக்காடு 13 இடங்கள்; காங்கிரஸ்- 28.4விழுக்காடு 17 இடங்கள்; மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 11.3விழுக்காடு தற்போதைய முதல்வர்- பிரமோத் சாவந்த்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.