Show all

இரண்டுசக்கர மின்சாரவண்டி வெடித்து முதியவர் பலி!

வீட்டிற்குள் இரண்டு சக்கர மின்சார வண்டிக்கு மின்னேற்றம் செய்து கொண்டிருந்த போது மின்கலவடுக்கு வெடித்து தீ பரவியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அரியானா மாநிலம் குருக்கிரமை சேர்ந்த சுரேஷ்சாகு என்ற 60 அகவை முதியவர், இரண்டு சக்கர மின்சார வண்டி வெடித்து தீப்பற்றி அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குருகிரமில் உள்ள சிறிய வீட்டில் முதியவர் சுரேஷ்சாகு, அவரது மனைவி மற்றும் 3 மகன்கள் இரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர மின்சார வண்டி திடீரென்று பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. பின் அங்கு கிடந்த துணிகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. 

இந்த விபத்தில் சுரேஷ்சாகு உடல் கருகி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகன்களும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், முதியவர் வாகனத்தை வாங்கி ஒரு ஆண்டு கூட ஆகியிருக்கவில்லை. அவர் வீட்டிற்குள் இரண்டு சக்கர மின்சார வண்டிக்கு மின்னேற்றம் செய்துக்கொண்டிருந்தபோது மின்கலவடுக்கு வெடித்து தீ பரவியிருக்க வேண்டும். இந்த அதிர்ச்சிநிகழ்வு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,102.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.