Show all

பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் தூக்கியெறியத் துடிப்பது! எது? ஏன்? என்பது குறித்து விளாசித் தள்ளிய திருமாவளவன்

பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அதுதான் இந்த சமூக கட்டமைப்பைச் சிதைத்து, வர்ணாசிரமத்தைத் தகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் தூக்கியெறிவதாகும் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

30,தை,தமிழ்த்தொடராண்டு-5123: புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூட்டாட்சிக் கோட்பாடும் நாடாளுமன்ற சனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று, வெள்ளிக்கிழமை, நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக இயற்றப்பட்ட சட்ட முன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் எதிரொலியாக இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் உறுப்பினர் சிந்தனை செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம், திமுக சார்பில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

திருமாவளவன் உரையில் ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜகவின் நோக்கம் குறித்து தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்திய கருத்துக்கள்:

மாநில அரசுகளுக்குச் சட்டம் இயற்றக் கூடிய ஒத்திசைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் தொடர்பாக சட்டம் இயற்றக் கூடிய அதிகாரம் உண்டா? இல்லையா? மாநில அரசுகளுடைய அதிகாரங்கள் என்ன? ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவு என்ன? இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தக் கூடிய கூட்டாட்சி கோட்பாடு எந்த நிலையில் இருக்கிறது? இது விவாதிக்கப்பட வேண்டிய பேருரையாடலாக மாற்றப்பட வேண்டிய, இந்திய அளவிலான உரையாடலாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது.

நடப்பு இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி கிடையாது. சகோதரத்துவம் இருந்தால்தான் சமத்துவம் வரும், சுதந்திரம் இருந்தால்தான் சகோதரத்துவம் இருக்கும். நீதி கிடைத்தால்தான் இந்த மூன்றும் கிடைக்கும். இவை மூன்றுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆகவே நடப்பைத் இடிப்பதற்கு, இவர்கள் பாபர் மசூதிக்கு போனதை போன்று கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டிய கட்டாயமில்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றே போதுமானது.

ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக கோலோச்சிக் கொண்டிருந்த இவர்கள் உழைக்கின்ற மக்களை ஏய்த்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் பகுத்தறிவு மூலமாக சிந்திக்கக் கூடாது என்கிற வகையிலே அவர்களின் தொல்கதைக் குப்பைகளை மூளையில் திணித்தார்கள்.

இந்திய சமூகக் கட்டமைப்பை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்கு இரண்டு தொல்கதைக் குப்பைகள், இதிகாசங்கள் என்ற பெயரால் மிக பெரிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. அதில் ஒன்று இராமாயணம் மற்றொன்று மகாபாரதம்.

இந்தியச் சமூகத்தை, சகோதரத்துவத்தை, சுதந்திரத்தைச் சிதைத்து, தனித்தனி குழுக்களாக காட்டுமிராண்டி சமூகங்களைப் போல எந்த தொடர்பும் இல்லாமல், ஆங்காங்கே தனித் தனித் தீவுகளாக இந்த சமூகங்களை மாற்றியமைத்ததில் இந்த இரண்டு இதிகாசங்களுக்கும் பெரும்பங்குண்டு உள்ளது.

ஆனா. ஆவன்னா. என்கிற தமிழ் அடிப்படை எழுத்து கூட படித்திருக்க மாட்டான். அவனுக்கு இராமன் லட்சுமணன் கதை தெரியும். பள்ளிக்கூடம் பக்கம் போயிருக்க மாட்டான். அவனுக்கு மகாபாரதத்தின் ஐந்து பஞ்ச பாண்டவர்கள் பற்றிய கதை தெரியும். இப்படிப் படிக்காதவன் உள்ளத்தில் இதை கொண்டு போய் விதைத்தார்கள்.

குலத்துக்கு ஒரு நீதி என்று சமூக கட்டமைப்பில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு, பார்ப்பானே எல்லாருக்கும் மேலானவன், உயர்ந்தவன், என்கிற இந்த கதைகள் எல்லாம் கற்பிதமாக நிலை நிறுத்தினார்கள். இந்தச் சமூக கட்டமைப்பு மீது யாராலும் கை வைக்க முடியவில்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட இந்த சமூக ஒழுங்கை அம்பேத்கரின் இந்திய அரசமைப்பு சட்டம் சிதைத்துக் கொண்டிருக்கிறது, என்று பேசினார் திருமாவளவன்.

ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் பாஜகவில் இருக்கிறார் என்றால் அவர் அப்பட்டமான சுயநலவாதி என்றே பொருள். தனிப்பட்ட முறையில் அவர் பதவி வாங்கலாம். ஆனால் இந்த சமூகத்திற்கு என்ன பலன் உள்ளது. அவர்களால் சாதியை ஒழிக்க முடியுமா? என்றாவது ஒழிப்போம் என்று சொல்லச் சொல்லுங்கள். இந்தியாவில் நாங்கள் சாதியை ஒழிப்போம், சகோதரத்துவத்தை நிலை நாட்டுவோம், அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் சொல்கிற சமத்துவத்தை வென்றெடுப்போம் என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரைப் பேச சொல்லுங்கள் நான் இந்த அரசியலை விட்டே வெளியேறுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியைக் கலைத்து விடுகிறேன். ஆனால் அதை அவர்கள் சொல்ல மாட்டார்கள், என்று தெரிவித்தார்.

பாஜகவின் கனவு திட்டம், செயல் திட்டம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே கலாசாரம், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கட்சி, ஒரே நாடு ஒரே ஆட்சி என்பதாகும். இங்கே மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. இவர்கள் மாநில கட்சிகளே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். 

குறிப்பாக இவர்கள் பாராளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையாக வந்தாலும் மாநிலங்களவையில் பாஜகவிற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி இரண்டு அவையிலும் ஒரு முன்வரைவு நிறைவேறினால் தான் அது சட்டமாகும். அதனால் இவர்கள் குதர்க்கமான யுக்தியைக் கையாளுகிறார்கள்.

தற்போது இந்தியா முழுவதும் ஒரே கட்சி ஆள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அதை இந்த அரசியலமைப்பு சட்டம் ஒப்புக்கொள்ளாது. ஆகவே இந்த அரசியலமைப்பு சட்டம்தான் பாஜகவின் முதல் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கரால் வகுத்து அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் சங்பரிவாரின் முதல் எதிரியாக இருக்கிறது. 

பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அவைதான் இந்த சமூக கட்டமைப்பைச் சிதைத்து, வர்ணாசிரமத்தை தகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் தூக்கியெறிவதாகும் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,157.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.