Show all

எதிர்வினையாக ஏவப்பட்ட அறிவூட்டக் கணைகள்! அமித்சா தொடுத்த ஹிந்தித்திணிப்பு ஆதிக்க அடாவடிக் கணைக்கு

அமித்சா தொடுத்த ஹிந்தித்திணிப்பு ஆதிக்க அடாவடிக் கணைக்கு எதிர்வினையாக அறிவூட்டக் கணைகள் விடுத்த சான்றோர் பெருந்தகையர் மு.க.ஸ்டாலின், வை.கோ, ஓ.பன்னீர் செல்வம், சீமான், ஜவாஹிருல்லா திருமாவளவன் உள்ளிட்ட இன்னும் பலர்.

27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: அமித்சாவின் ஹிந்திமொழித் திணிப்பு ஆதிக்க அடாவடி பேச்சுக்கு அறிவார்ந்த சான்றோர் பெருமக்கள் பலரும், எதிர்வினையாக அறிவூட்டக் கணைகளை விடுத்துள்ளனர். 

ஹிந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்சா நினைக்கிறாரா? என்று தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்சா பேசும்போது, 'நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வௌ;வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். ஹிந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்; உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரப்பாட்டு மொழியாகும் என்று பேசி இருந்தார்.

அந்த வகையில் அமித்சாவின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது கீச்சுப் பக்கத்தில், 'ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியைப் பயன்படுத்துங்கள்' என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.

ஹிந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்சா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால், அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித்சா, ஹிந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த ஹிந்தி நாள் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்சா, 'ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி கட்டாயம் தேவை. அதுதான் பன்னாட்டு அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை இணைக்க ஹிந்தி மொழியால்தான் முடியும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஹிந்தி மொழி மிகப்பெரிய உச்சத்தை அடைந்துவிடும்.' என்று ஹிந்தித் திமிரோடு பேசினார். அமித்சாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

தற்போதும் அதைப்போல மீண்டும் நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தி இருக்கிறார்.

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய விடுதலைக்கு எட்டு  ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழ்நாட்டு மக்கள் மொழி உரிமைக்காகப் போராடியதை மறந்துவிட வேண்டாம்.

இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி, இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு பாஜக அரசு வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக ஹிந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முதன்மைத்துவத்தை இணையாக கொண்டாட முயலாமல், ஹிந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுக்க முயலும் பாஜக அரசின்  எதேச்சதிகார செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.

பாஜக அரசின் ஹிந்தித்திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்த்து நின்று போராடுவோம் என்று பேரறிவிப்பு செய்து, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித் திணிப்பினால் தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச் செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உள்துறை மந்திரிஅமித்சாவின் உரை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும்.

ஒருநாடு, ஒரு மதம், ஒரு மொழி என்ற சங்பரிவாரக் கொள்கையை ஒன்றிய ஆட்சியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே உள்துறை அமைச்சர் அமித்சாவின் பேச்சு அமைந்துள்ளது.

மீண்டும் ஹிந்தி மொழித் திணிப்பு முயற்சி நடக்கும் எனில் தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மொழி உணர்வை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அமித்சாவின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஹிந்தி குறித்த அமித்சா பேச்சு நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில்; இந்திய அலுவல் மொழிகள் 22. ஹிந்தி அவற்றுள் ஒன்று. ஹிந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையை விட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். 

ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன்  நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாகவுள்ளனர் பாஜகவினர். எனவேதான் அமித்சா இப்படி பேசிஇருக்கிறார். 

அமித்சாவின் இந்தக் கருத்துப் புதியதல்ல. ஒரேநாடு- ஒரேமொழி எனும் பாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி. ஆங்கிலம் அந்நிய மொழி என்னும் வாதங்களை முன்வைத்து அப்பாவி மக்களை ஏய்க்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மக்கள் விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிருக்கிறோம் இவ்வாறு கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,214.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.