Show all

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்! படைத்துறை உலங்கி விபத்து தொடர்பில், மீட்புப் பணியைத் துரிதப்படுத்த

குன்னூர் உலங்கி விபத்து தொடர்பாக, மீட்புப் பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று பிற்பகல் 12 மணியளவில், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென படைத்துறை உலங்கி ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருந்தது. முதன்மை ஆலோசனைக் கூட்டத்திற்காக பல உயர் படைத்துறை அதிகாரிகள் இதில் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த உலங்கியில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் பயணித்ததாக படைத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. அவருடைய மனைவியும் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது. 

தற்போதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரிந்துள்ளதால் பிபின் ராவத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. மொத்தம் 14 பேர் பயணித்தாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் களநிலவரம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல் தெரிவித்துள்ளார். 

அப்போது மீட்பு பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மற்றொருபக்கம் தமிழ்நாடு அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுத்துறைச்செயலாளர் ஜகந்நாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.