உலகின் முன்னணி
அணு ஆயுத வல்லரசாகத் திகழும் அமெரிக்கா, ஒருமுறை நிலவின் மீது அணுகுண்டுத் தாக்குதல்
நடத்தத் திட்டமிட்டதாம். ‘எ ஸ்டடி ஆப் லூனார் ரிசர்ச் பிளைட்ஸ்’
அல்லது ‘புராஜெக்ட் ஏ119’ என்று
அழைக்கப்பட்ட இத்திட்டத்தை, 1950ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அமெரிக்க விமானப் படை
தீட்டியதாம் சரி, எதிரி...
அட, ஆளே இல்லாத நிலவை ஏன் அணுகுண்டால் தாக்க வேண்டும்? தங்களால் பூமியைத் தாண்டி நிலவையும் தாக்க முடியும்,
என்று உலகின் முன் மார்தட்டிக்கொள்வதுதான் அமெரிக்காவின் நோக்கம். தவிர, அப்போது தங்களுடன்
கடும் விண்வெளிப் போட்டியில் இருந்த ரஷியாவைத் திகைக்கச் செய்ய வேண்டும் என்பதும் ஒரு
காரணம். நிலவில் அணுகுண்டு போடுவது எளிது என்பதுடன், தங்கள்
நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பெருமிதமாக உணரச் செய்யலாம் என்றும் அமெரிக்க அரசு
கருதியது. நிலவின் மீதான அணு ஆயுதத் திட்டத்தின் முக்கிய
விஞ்ஞானிகளில் ஒருவரான லியோனார்டு ரீபில், கண்டம் தாண்டிச் செல்லும் ஏவுகணை மூலம் நிலவைத்
தாக்குவது சுலபம் என்றும், அதுவும் நிலவின் குறிப்பிட்ட பகுதியில் துல்லியமாகத் தங்களால்
தாக்க முடியும் என்று கருதியதாகவும் பிற்பாடு தெரிவித்தார். நிலவில், பூமியில் இருந்து நன்கு தெரியும் பகுதியில்
தாக்குதல் நடத்த அமெரிக்க விமானப் படை திட்டம் போட்டது. அப்போதுதானே பூமிவாழ் மக்களால்
தங்கள் ‘சாதனை’யை தெரிந்துகொள்ள முடியும்? ஆனால் ஒருகட்டத்தில் இத்திட்டம் கைவிடப்பட்டது.
வௌ;ளி நிலவின் மீதான துல்லியத் தாக்குதலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிதாக ஆதரவில்லை
என்று தெரியவந்ததுதான் காரணம். நல்லவேளை, நிலா
பிழைத்துக்கொண்டது!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.