12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ள அமலாபால், சென்னையில் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் வகை சொகுசு கார் வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1.12 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் காரை புதுச்சேரியில் அமலாபால் பதிவு செய்துள்ளார். இதற்காக, திலாஸ்பேட் பகுதியில் செயின்ட் ரெர்சாஸ் தெரு என்ற முகவரியில் வீடு இருப்பதை போல முகவரி கொடுத்து கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பென்ஸ் காரை கொச்சியிலுள்ள தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ள அமலாபால் கேரளாவிலுள்ள நிகழ்ச்சிகளுக்கு அதை பயன்படுத்தி வருகிறார். ஆனால் அதில்தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஹவாலா மோசடி பேர்வழி ஒருவர் சமீபத்தில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனத்தில் சுற்றியதை கண்டுபிடித்த கேரள காவல்துறையினர், புதுச்சேரி பதிவு வாகனங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றினர். கேரள காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அமலாபால் காரும் சிக்கியுள்ளது. கேரள மோட்டார் வாகன சட்டப்படி கேரளாவில் வாகனத்தை பயன்படுத்தினால் ஓராண்டுக்குள் கேரள பதிவு எண்ணுக்கு அதை மாற்ற வேண்டும். காரின் மதிப்பில் 20 விழுக்காடு வரியாக செலுத்த வேண்டி வரும். இதனால் அவர் வரி ஏய்ப்பு செய்தவராக கற்பிக்கப் படுகிறார். வரி ஏய்ப்பு செய்தவர்களை அதிகபட்சம் 7 ஆண்டு சிறையில் தள்ள முடியும். அபராதமும் விதிக்கலாம். இதில் கேரள காவல்துறையினர், எந்த மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.