தவம் என்றால் என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு, விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐந்து அகவை வரையிலான குழந்தைகளும், வெற்றியாளர்களும் தங்கள் தலையெழுத்தைத் தாங்களே எழுதிக்கொள்வதான மந்திர ஆற்றலை இயல்பூக்கமாக பெற்றுள்ளனர். தங்கள் விருப்பத்திற்கு அவர்கள் வெற்றியைக் குவிக்க, அந்த வெற்றிபெறுவதில் நேருகிற இன்னல்களை எளிதாக கடந்து போவதும், காலம் குறிக்காது வெற்றிக்கு காத்திருக்கிற அவர்களின் நோற்றலையே தவம் என்று தெரிவிக்கின்றனர் தமிழ்முன்னோர்.

ஆக- தன்னைக் கடந்தும் உள்ளும் இருக்கிற கடவுளை வேண்டி, வேண்டலுக்கு காலம் குறிக்காமல், கிடைக்கும் வரை ஊக்கமதைக் கைவிடாமல் இருத்தல் என்பதைத் தவம் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். தவத்தைக் குறிக்க நோற்றல் என்கிற சொல்லே தமிழ்முன்னோர்களால் பேரளவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

என்ற குறளில்- ஒரு தந்தை, அவன் தன் பிள்ளையைச் சான்றோன் ஆக்குவது நெடிய தவம் என்று குறிக்கிறது. இதே குறளில் தன் தந்தையின் அந்தத் தவப்பெருமையை உலகிற்கு பறை சாட்டுவதற்கு இவன் ஆற்ற வேண்டிய உதவித் தவத்தையும் குறிப்பிடுகிறது. 

தவத்தின் காலம், நம்மால் குறிக்கப்படுவது அன்று. கடவுளால் எடுத்துக்கௌளப்படுவது ஆகும். கருவுற்ற பிள்ளைத்தாய்(ச்சி)யின் மகப்பேற்றுக்கான தவத்தின் காலம் அவள் பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை நீள்கிறது. 

இதைத்தான் திருக்குறள்:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
என்று பேசுகிறது.
தவவேண்டலில் தனக்குற்ற துன்பத்தைப் பொறுத்தலும், தான் தாங்கும் உயிருக்கு துன்பம் நேராமல் பாதுகாத்தலும், ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும் என்பது இந்தக் குறிளின் பொருள்.

கடவுளிடம் ஒன்றைக் கேட்கும் போது, கடவுள் நம்மிடம் அதற்கான ஒரு வேலையைக் கொடுக்கும். அதை நிறைவேற்றித் தந்தால் மட்டுமே நாம் கேட்டது நிறைவாகக் கிடைக்கும் என்கிற புரிதல் உள்ளவர்களுக்கே தவம் ஆகிவரும் என்பதை பின்வரும் குறள் தெரிவிப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.   

ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளைத்தாய்- தவமியற்றும் போது, அந்தக் குடும்பத்தில் மற்றவர்கள் தங்களுக்கு எந்தத் தனிப்பட்ட தவவேண்டுதலும் முன்னெடுப்பதில்லை என்பதை திருக்குறளின் இந்த மூன்றாவது குறள் விளக்குவதாகிறது.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.   

ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளைத்தாய்- தவமியற்றும் போது, அந்தக் குடும்பத்திற்கான வெளிப்பகை அகலுவதும், குடும்பத்தாரின் உயர்வும் பிள்ளைத்தாயின் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும் என்பதாக, திருக்குறளின் இந்த நான்காவது குறள் கொண்டாடுகிறது.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும். என்கிறது தவம் அதிகாரத்தின் ஐந்தாவது திருக்குறள்.
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.   

இப்படிப் பிள்ளைப் பேற்றுக்கும், வேறுவேறு படிப்பு, தொழில், வணிகம், வேளாண்மை போன்ற வாழ்க்கை கடமைகளுக்கும் தவமாக கடவுளிடம் வேண்டியிருப்பவர்கள் மட்டுமே கடவுளிடம் வேண்டியதைப் பெறுகின்றனர். அப்படி முயலாமல், வெறுமனே ஆசைகளை மட்டுமே புலம்பல்களாக முன்னெடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியைத் தேடாதவர்களாக துன்பத்தில் உழல்கின்றனர் என்று தெரிவிக்கிறது திருக்குறளின் தவம் அதிகாரத்தின் இந்த ஆறாவது குறள். 
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.   

தவவேண்டலில் உறுதியாக இருப்பவருக்கு சுட சுட பொன் ஒளிர்வது போல, துன்ப இருள் காணமல் போகும் என்கிறது இந்தக் குறள்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.   

தவவலிமையால் வெற்றிகளைக் குவிப்பவரை உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும் என்கிறது இந்தக் குறள்.
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். 

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் இறப்பையும் தள்ளிப்போட்டு வாழ்வார்கள் என்கிறது இந்த ஒன்பதாவது குறள்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.   

நாட்டில் எண்பது விழுக்காட்டு மக்கள் வெறுமனே பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதற்கும், சிலர் மட்டுமே வெற்றியாளர்களாக இயங்குவதற்கும் அவரவர் மேற்கொள்ளாத மற்றும் மேற்கொள்கிற தவமே காரணம் என்று தவம் அதிகாரத்தை நிறைவு செய்கிறது இந்தப் பத்தாவது குறள். 
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். 

ஆக தவம் அல்லது நோற்றல் என்பது- சிலமணித்துளிகள் இலக்கு இல்லாமல், வழிகாட்டிகள் சொல்லுகிற எதையாவது நினைத்துக் கொண்டதோடும், கேட்டுக் கொண்டதோடும் நிறைவு பெறுவது ஆகாது. 

பல்வேறுமத வழிகாட்டிகள் காட்டுகிற வழியில், உங்கள் தேவை எதையும் குறிப்பிடாமல், உங்களுக்கு நீங்களோ, அவர்களோ, முன்னெடுக்கும்- வெறுமனே சடங்குகள், பிறமொழி மந்திரங்கள் தவத்திற்கு உரிய வடிவங்கள் அல்ல. 

உங்கள் தேவை குறித்து, உங்கள் எண்ண மொழியில், நீங்கள் கேட்பது மட்டுமே மந்திரம் ஆகும். உங்களுக்காக யாரும் கடவுளிடம் வேண்டுவது அவர்களுக்கான மந்திரமாகவும்- அவர்கள் உங்களுக்காக முன்னெடுக்கும் வாழ்த்தாகவும் அமையும். நீங்கள் உங்கள் தேவையைக் கேட்டிருந்த வகைக்கு நோற்றிருத்தல் தவம் ஆகும்.

தவம் என்பது காட்டிற்கு ஓடிச்செல்வதோ, கடமைகள் மற்றும் குடும்பத்தைத் துறப்பதோ, பல்வேறு சடங்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதோ அன்று. அப்படி மேற்கொள்கிறவர்களுக்கும்- அவைகளைக், கடவுள் புரிந்து கொள்கிற வகைக்கு உங்களுக்கு சிலபல வாய்ப்புகள் கிடைக்கப்பெறலாம் என்பதும் உண்மையே. அவைகளில் நீங்கள் பயனடைவதைக் காட்டிலும், உங்களின் வழிகாட்டியே பேரளவாகப் பயன் அடைவார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,481. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.