Show all

கணியக்கலை தொடர்கட்டுரை: 2.நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட முன்னேற்றக் கலைகள்.

அன்பின் இனிய தமிழ் உறவுகளே! நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நிமித்தகம் என்பது: 1.நீங்கள் இந்த நாளில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த ஓரையில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த நாள்மீனில் பிறந்து விட்டீர்கள். 2.நீங்கள் இந்த திசையில் பிறந்துள்ளீர்கள் 3.நீங்கள் பிறந்த போது கோள்கள் இந்த இந்த ஓரைகளில் இருந்துள்ளது என்று மூன்று வகையான கணிப்புகளை வைத்து உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று பலன் சொல்லுவது. 

கணியக்கலை, நிமித்தகத்தின் மேம்படுத்தப் பட்ட கலை. கணியக்கலை என்பது: உங்கள் பெற்றோர் உங்களுக்கு இட்ட பெயரால்- உங்களுக்கு வாய்க்கப் பெற்ற இயல்பை புரிந்து கொண்டு, அல்லது உங்களுக்கு பிடித்த இயல்புக்காய் உங்கள் பெயரை அமைத்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த இயல்புக்கான கல்வி, தொழில், என அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான கலை ஆகும். இது நிமித்தகத்தைத் தோற்கடிக்கிற கலை ஆகும். உங்களுக்கு அமையப் போகிற வாழ்க்கையை மேலே குறிப்பிட்ட மூன்று கணிப்புகள் மூலம், அன்றாடம் பலன் தெரிவித்து, அதை உங்களை ஏற்றுக்கொண்டு அந்தக் கணிப்புகளின் போக்கில் உங்களை முன்னெடுக்கிற கலை நிமித்தகமாகும். 

உங்கள் பெற்றோர் தீர்மானித்த இயல்பு உங்களுக்கு விருப்பமில்லை யெனில் அதுகுறித்தும் கவலைப்பட வேண்டாம். எது உங்களுக்கு விருப்பமான இயல்பு, எது உங்களுக்கு விருப்பமான கல்வி, எது உங்களுக்கு விருப்பமான தொழில் அவற்றை முன்னெடுப்பதற்கானதுதான் கணியக்கலை. 

அடுத்து மந்திரம் என்பது கணியத்தின் மேம்படுத்தப்பட்ட கலை. இந்தக் கலையில்- நிமித்தகத்தைப் பற்றியோ கணிக்கலை பற்றியோ கவலைப்படவே வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் போக்கை உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி அவ்வப்போது கட்டமைத்துக் கொள்ள முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம்.

மீண்டும் நிமித்தகத்திற்கு வருவோம். நிமித்தம்- என்றால், ~காலம்சார்ந்த| என்று பொருள். நிமித்தகம் என்பது காலம்சார்ந்த முன்னேற்றக் கலை. ஆக நிமித்தகம் என்கிற கலை தோற்றுவிக்கப் படுவதற்கு, காலம் குறித்த, பார்வை-தீர்மானம்-முழுமையானவரையறை நிறைவு படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

காலத்திற்கு அடிப்படையான கோள்களை யுணர்ந்து, தற்பரை-விநாழிகை-நாழிகை-பகல்இரவு-நாள்-கிழமை-மாதம்-பருவம்-ஆண்டு-ஆண்டின் சுழற்கணக்கு தொடர்கணக்கு என்பனவெல்லாம் நிறைவு படுத்தப் பட்டிருக்க வேண்டும். தமிழர்களால் நிறைவு செய்யப் பட்டது.

60தற்பரைஒருவிநாழிகை, 60விநாழிகைஒருநாழிகை, பகல்30இரவு30- என 60நாழிகைஒருநாள்; ஏழுநாள் ஒருகிழமை. ஞாயிறு திங்கள் செவ்வாய் புதியம் வியாழம் வெள்ளி காரி என்கிற கிழமைக்குரிய ஏழுநாட்களுக்கு ஏழுபெயர்கள்.

பனிரென்டுமாதங்கள்; ஆறுபருவங்கள்; 15தற்பரை 31விநாழிகை 15நாழிகை 365நாள் கெண்டது ஓர் ஆண்டு யென்று காலத்தை- நிறைவு செய்தான் நம்பழந்தமிழன். இதுவரை நாம் விவரித்தது காலம். காலம் சார்ந்தது அல்லவா நிமித்தகக்கலை? இத்துடன் பிறந்த நேரம், அதையொட்டி நிகழப் போகும் இடர்சோதிப்பதற்கான சாதகக் குறிப்புகள் உள்ளடங்கியது நிமித்தகக் கலை. 

நிமித்தகக்கலை எனும், காலம் சார்ந்த இந்தப் பகுதியை மட்டும், ஜாதகம் ஜோஸ்யம் என்று ஆரியர் கண்டுபிடித்த கலை போல தலையில் வைத்துக் கொண்டாடியும், பகுத்தறிவு மார்க்சிய தலைப்பில் இருப்பவர்கள், மூடநம்பிக்கை என்று எள்ளி நகையாட,

இன்று தமிழ்ஆண்டு: 5121, ஐப்பசி மாதம் இருபத்தி ஏழாம் நாள், புதியம் கிழமை, 45வது நாழிகை, 30வது விநாழிகையில் இந்தப் பதிவு மௌவல் இணையத்தளத்தில் இடப்படுகிறது- என்கிற தமிழ் தொடர்ஆண்டுகணக்கு உள்ளிட்ட, முழு நிமித்தகக்கலையையும் பின்னுக்குத் தள்ளி, உலகுக்கே கிழமையையும் நிமித்தகக் கலையின் பெரும்பகுதியை வானியல் என்ற தலைப்பில் கொடையாகக் கொடுத்த தமிழர்கள் நாம் என பெருமிதம் கொள்ள வேண்டியவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் ஆர்வங்களையும் ஐயப்பாடுகளையும் என்ற kumarinadanr@gmail.com மின்அஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.