கனடா நாட்டில்
வசித்து வந்த வங்காளி ரஃபிகுல் இஸ்லாம், ஐநா மன்றத்தின் அப்போதைய பொதுச் செயலாளராக
இருந்த கோஃபி அன்னானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விளைவாக வந்ததுதான், பிப்ரவரி.21 சர்வதேச
தாய்மொழி நாள் என்ற அறிவிப்பு. ரஃபிகுல் எழுதிய மடலுக்கும் ஒரு பின்னணி உண்டு.
1952 பிப்ரவரி 21ல் தான் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு பாகிஸ்தானில்
(இன்றைய வங்கதேசம்) மாணவர் போராட்டம் வெடித்தது. பாகிஸ்தானின் தேசிய மொழியாக, வங்காளி
இடம் பெற வேண்டும்
என்ற கோரிக்கை விடுத்த மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. பல இளைஞர்கள் அங்கேயே
கொல்லப்பட்டனர். பாகிஸ்தான்-வங்கதேசம் என இரு நாடுகள் சண்டையிட்டுப் பிரிய, மொழியே முக்கிய காரணமாக
அமைந்தது. உலகில் தற்போது, குறைந்தது 10 லட்சத்துக்கு மேற்பட்டோர்
பேசுவதாக, சுமார் 140 மொழிகள் புழக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும்,
உலகின் பல பாகங்களிலும் வலுவான ஆதிக்க மொழிகளால், பல சிறு மொழிகள் வழக்கொழிந்து வருகின்றன. மனித இனத்தின் அறிவுப் பரிணாம வளர்ச்சி, அதனையொட்டி
அனைத்து வளர்ச்சிகளும் மொழியை அடிப்படையாகக் கொண்டே ஏற்பட்டது. ஓர் இனத்தின் பண் பாட்டுக்
கூறுகளில் மொழியே மையப் புள்ளியாக விளங்குகிறது. அதனைச் சுற்றித்தான், இனத்துக்கே உரித்தான
பண்டைத் தொழில்களும் பாரம்பரியக் கலைகளும் வளர்ந்தன. ஆதலால், எந்த ஒரு மொழியின் வீழ்ச்சியும்
மனித குலத்துக்கு நல்லதல்ல. முதன்முதலில் 2008-ம் ஆண்டு, ‘சர்வதேச தாய்மொழி நாள்’
யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டது. “நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க, மேம்படுத்த,
மொழிகளே மிக வலிமை வாய்ந்த சாதனங்கள். தாய்மொழி கற்பித்தலை மேம்படுத்தும் எல்லா முயற்சிகளும்,
உலகம் முழுவதும் மொழி சார்ந்த கலாச்சார விழிப்புணர்வை மேம்படுத்தும்; புரிதல், சகிப்புத்தன்மை
மற்றும் ஒற்றுமையை ஈர்க்கச் செய்யும்” என்கிறது இதற்கான
ஐ.நா. மன்ற இணையத்தின் முகப்பு. “எல்லா
மொழிகளுக்கும் சம அளவு தலையாயத்துவம்; எல்லா மொழிகளுக்கும் சமமான பணிச் சூழல்”
என்பதையும் இந்த நாள் வலியுறுத்துகிறது. வேறு எப்போதையும் விட இப்போது இந்த ‘நாள்’ மிக அதிகம் தேவைப்படுவதாக
உலக மக்கள் கருதுகிறார்கள். காரணம்...? ஆங்கிலம். இன்று 150 கோடி
பேருக்கு மேல் ஆங்கிலம் பேசுவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் இத்தொகை, 200 கோடியை விஞ்சும்
என்றும் சொல்லப்படுகிறது. கணினி மற்றும் இணையங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க,
ஆங்கிலத்தின் ஆதிக்கமும் அதிகரிக்கும். கல்வி, வணிகம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற
துறைகளில் பிற மொழிகள், தத்தமது இடத்தை முற்றிலுமாக இழக்க நேரிடலாம். இந்நிலையில்தான் பியூ ஆராய்ச்சி
மையம்- அமெரிக்கா, கனடா,
ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட
14 நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லா நாடுகளிலுமே, 70விழுக்காட்டுக்கு
மேல், தங்களின் மொழியைத்தான் தங்களின் தேசிய அடையாளமாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
சமயம், சமூகப் பழக்க வழக்கங்கள்,
சட்டப் பின்னணிகள்
ஆகியன பின்னுக்குத்
தள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வு நமக்கு சொல்லும் செய்திதான் மிகவும்
தலையாயது. “ஏன் எப்போதும் தமிழ்! தமிழ்.. என்று கூவுகிறீர்கள்..?
அது ஒரு மொழி அவ்வளவுதான்.
பிற நாடுகளில்,
குறிப்பாக மேலை நாடுகளில் எல்லாம் இந்த பேதைமை இல்லை..” என்று சொல்பவர்களின்
கூற்று பொய்யாகி இருக்கிறது. எல்லா நாடுகளிலும்
எல்லா மக்களும் மொழியை வாழ்வின் முக்கிய அங்கமாகவே கருதுகின்றனர். நன்கு வளர்ந்த
நாடுகளிலும் கூட, மொழி ஒரு தலையாய
அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பதற்றம் நிறைந்ததாக உலகம் மாறி வருகிறபோது, மொழி, இசை, விளையாட்டுதான்
அதனைத் தணிக்கிற மாமருந்தாக இருக்க முடியும். வழக்கொழிந்து வரும் சிறு மொழிகளைப் பாதுகாப்பதில்,
கணினிகள், இணையங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. இலக்கியப் படைப்புகள், எழுத்துகள்,
சொற்கள், ஒலித்தல் எல்லாம் தாண்டி, ஒவ்வொரு மொழிக்குமே ஆன உடல் அசைவு, முக உணர்ச்சிகள்
ஆகியன கூட இணையங்களில் பாதுகாக்கப்படுகின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழிகளுமே, தங்களது தனித்தன்மையை
இழந்து வருகின்றன; ஒரு “பொதுமை”
வெளிப்பட்டுக் கொண்டு வருகிறது.
‘இணைய மொழி’ ‘கைப்பேசி மொழி’
என்று வெவ்வேறு பெயர்களில்,
முற்றிலும் புதிய, ‘கலப்பு மொழி’ வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதன்மூலம், ஆங்கிலத்துக்கும் மிகப் பெரிய ஆபத்து
ஏற்படலாம். வட்டார உள்ளூர் மொழிகளும் பேச்சு வழக்கு சொற்களும்தான் உடனடி ஆபத்தை எதிர்நோக்கி
உள்ளன. அதிலும் ஆங்கிலக் கலப்பு, பல சொற்களைக் ‘காவு’ கொண்டு வருவது
மிகவும் கவலை தரக் கூடியது. என்னதான் ஆங்கிலத்தில் படித்து எழுதிப் பேசினாலும்,
சலசலக்கும் ஊற்று; சடசடக்கும் காற்று; படபட வென்று பொழியும் மழை; தட..தட என்று ஓடும்
நதி என இயற்கை, தாய்மொழியில்தான் நம்மை வருடுகிறது. ஆத்திர அவசரத்துக்கு
பிற மொழி, கை கொடுக்கலாம். மற்றபடி, உயிரோடு உணர்வோடு ஒன்றி வராது. அதற்கு வேண்டியது..?
தாய்மொழிதான். தமிழ்! என்னுடைய முதலாவது
உடைமை. என் தாய் தன் இரத்தத்தை
பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன் உயிர்க்காற்றை
மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார். என்உடலும் என்தமிழும்
என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை. அவைகளே எனக்கு
ஆதாரம். என்தமிழ் ! என்தாய் எனக்கு
தந்த முதல் உடைமை என்பதே எனக்குப் பெருமை. என்தமிழை! எந்த இன்னொரு மொழியோடும் வைத்து ஒப்பிடத் தேவையில்லை.
என்தமிழை! பாதுகாக்க வேண்டியதும் பெருமைப் படுத்த வேண்டியதுமான
கடமை என்னுடைதே. தாய்மொழி! வெறுமனே கருத்துப் பறிமாற்றக் கருவியன்று. அதுவே
அவன் அறிவின் மூலம். அடுத்த மொழிகள்
எத்தனை கற்றாலும் அவைகள் கருவிகள் மட்டுமே. தமிழ் உயர்வானது!
தமிழ் பழமையானது! தமிழ் வளமையானது! தமிழ் செம்மையானது! என்பதெல்லாம் நிற்காது. தமிழ் என்தாய்
எனக்குத் தந்த முதல் உடைமை என்பது ஒன்றே நிற்கும். அதுவும் ஏனைய 2.குடும்பம் 3.வீடு 4.கல்வி 5.கலை 6.இலக்கியம் 7.தொழில் 8.கருவிகள் 9.உடை,அணிகலன்
10.உணவுகள் 11.வணிகம் 12.நாடு 13.அரசு 14.நீராதாரம் 15.கோயில் 16.நிதி 17.நீதி 18.பாதுகாப்பு
19.பண்பாடு 20.வரலாறு ஆகியவற்றில் எல்லாம்
உடைமையாளனாக மாறா விட்டால்
நிற்காது. எனவே வெறுமனே தமிழ்
உணர்ச்சியை மட்டும் தூண்டுவதை நிறுத்திவிட்டு
மற்றவைகளில் தமிழன் உடைமையாளனாக
மாறி தமிழைத் தரணி போற்றச்
செய்குவோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



