Show all

கொண்டாடுவோம்! இன்று தமிழ் செம்மொழிநாள்! இந்திய ஒன்றிய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த நாள்

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது தனித்து இயங்கவல்ல மொழியாக இருக்க வேண்டும். மற்ற மொழிச்சார்பு அற்றதாக இருக்க வேண்டும். இந்த வரையறைகளை நிறைவு செய்யும் மொழிகள் செம்மொழிகளாக விளங்கும். உலகின் பழமையான செம்மொழிகளாக, தமிழ், சமஸ்கிருதம், ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், சீனம் ஆகிய ஆறு மொழிகள் அறியப்படுகின்றன. 

ஆனால் இந்திய ஒன்றிய அரசு தமிழை செம்மொழியாக கடந்த 23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5106 அன்று தான் (06.06.2004) அறிவித்தது. 

அந்த ஆண்டு நடந்த நாடாளுமனறத் தேர்தல் அறிக்கையில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்போம் என திமுக அறிவித்தது. அதன் படி தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவை அமைந்த போது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. 

இந்தியாவில் ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அந்த மொழி ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்க வேண்டும். அந்த மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற வரையறைகள் உண்டு. அதன் அடிப்படையில் 23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5106 அன்று (06.06.2004) தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் தான். 

ஆனால் அப்போது தமிழ் மொழி ஆயிரம் ஆண்டு பழமையானது எனக் கூறி செம்மொழி தகுதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆயிரம் ஆண்டு பழமையானது என்று கூறியது தமிழின் தொன்மையைக் குறைக்கும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது. 

இந்திய அரசின் வரையறைக்காக தமிழின் தொன்மை குறைத்துக் காட்டப்பட்டாலும், இந்திய ஒன்றிய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்ததை முறையாக பயன் படுத்திக் கொள்ளாமல்,  சோம்பி விட்டு விடக்கூடாது. செம்மொழிக்கு என்னென்ன வாய்ப்புகளும், சலுகைகளும், கடப்பாடுகளும் உண்டோ அத்தனையையும் பயன் படுத்திக் கொண்டாக வேண்டும்.

தமிழறிஞர்கள் திமுக மீது வேறு சில காரணங்களுக்காக இருக்கிற வெறுப்பை, இந்திய ஒன்றிய அரசின் தமிழ்ச் செம்மொழி அங்கிகாரத்தை திமுக ஈன்ற பிள்ளையாக கருதி புறக்கணிக்கக்  கூடாது. கொண்டாடுவோம் இந்த நாளை! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,810. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.