Show all

பொள்ளாச்சி, பாலியல் காமக்கொடூரன்கள் மீதான வழக்கு நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி, பாலியல் காமக்கொடூரன்கள் தொடர்பான வழக்கு, இன்று காலை தமிழ்நாடு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை முகநூல் மூலம் தொடர்பு கொண்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் குற்றவாளிகளோடு ஆளும்கட்சிக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது வரை 8 பேர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களோடு வேறு யாருக்கும் தொடர்பு இல்லை குறிப்பாக அரசியல் வாரிசுகளுக்கு 100 விழுக்காடு தொடர்பு கிடையாது என்று கோவை மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று காலை தமிழ்நாடு சிறப்பு புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதற்காக சிறப்பு பெண் அதிகாரியை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

வழக்கில் கடுமையான நடவடிக்கைக் கோரியும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் இந்த வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,089.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.