Show all

தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆவேசம்! பூணூலைப் விமர்சித்த கமல்ஹாசன் பிராமண குல துரோகியாம்

21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பூணூலைப் பற்றி விமர்சனம் செய்த நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியிருக்கும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன், ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு கீச்;சுவில் பதிலளித்தார். அப்போது, ரசிகர் நீங்கள் படித்த நூல்களில் உங்களை மிகவும் பாதித்த நூல் எது என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், 'நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது. அது என்னை மிகவும் பாதித்த நூல் 'பூணூல்' அதனாலேயே அதை தவிர்த்தேன்,' என்று பதிலளித்திருந்தார். 

இந்நிலையில், அவரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கீச்சுவில் பூணூலைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சித்த பிராமண குலத்துரோகி கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறோம்.

பிராமணர்களின் புனிதமான அடையாளமாக இருக்கும் பூணூலை விமர்சிப்பது கமலின் வக்கிர புத்தியைக் காட்டுகிறது. பூணூலை குறை கூற கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? பணத்துக்காக கலையை விற்கும் ஒரு வியாபாரி. தனது சமுதாயத்தை இழிவுபடுத்தும் கேவலம் எந்த சாதியிலும் கிடையாது. 

சாதி இல்லை என்று கூறும் நடிகர் கமல்ஹாசன், தேவர் மகன், விருமாண்டி படங்களில் குறிப்பிட்ட சில சாதியை உயர்த்திக்காட்டிய வேடதாரி. தைரியம் இருந்தால் இவர் மற்ற சமூகத்தினரை விமர்சிக்கட்டும். 

கமல் போன்ற அரைவேக்காடு, போலி அரசியல்வாதி பிராமண குலத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறோம், மன வேதனை அடைகிறோம். வரும் தேர்தலில் பிராமண சமூகத்தினர் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்,' என்று அவர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,839.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.