Show all

சசிகலா- திருத்துறைப்பூண்டி முதல் புனித ஜார்ஜ் கோட்டை வரை!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் பிறந்த வி.கே.சசிகலா தமிழகத்தின் 21-வது முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

     1956 சனவரி 29-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் 6 குழந்தைகளில் 5-வதாக பிறந்தவர் சசிகலா. வனிதாமணி, சுந்தரவதனம், வினோதகன், ஜெயராமன், திவாகரன் ஆகியோர் உடன்பிறந்தவர்கள்.

     சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திருமணத்துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரும், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியுமான மன்னார்குடியைச் சேர்ந்த ம.நடராசனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

     தீவிர அரசியலில் இறங்கிய ஜெயலலிதா 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். இதனால் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியானார் சந்திரலேகா.

     அந்த காலகட்டத்தில் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசன் தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார்.

     அப்போது ஆழ்வார்பேட்டையில் தம்பி திவாகரனுடன் இணைந்து சசிகலா காணொளிப்பேழை கடை நடத்திவந்தார். அந்த காணொளிப்பேழை கடையிலிருந்து ஜெயலலிதா தனக்கு பிடித்த படங்களின் காணொளிப்பேழைகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது போயஸ் தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

     அந்தக் காலகட்டத்தில் எஸ்.டி.சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்தப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் ஜெயலலிதாவும் - சசிகலாவும் நெருங்கிய தோழிகளாக மாறினர்.

     அதன்பிறகு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். ஜெயலலிதா எங்கு சென்றாலும் அங்கு சசிகலாவும் பயணிக்கத் தொடங்கினார். அந்த அளவுக்கு இருவரது நட்பும் வளர்ந்தது.

     இந்நிலையில், 1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அந்த நேரத்தில் சசிகலா, நடராசன் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தனர். ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டிருந்தபோது எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதாவை அங்கு நிறுத்தி வைத்தனர். அவருக்கு பாதுகாப்பாகவும் இருந்தனர்.

     எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், 1989-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக முதன்மையான எதிர்க்கட்சி தகுதியைப் பெற்றது. உடைந்த அதிமுக மீண்டும் ஒரே கட்சியானது. ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

     1989-ம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர், அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதா எழுதி வைத்திருந்த கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சோதனையான நேரங்களில் ஜெயலலிதாவுக்கு சசிகலா உறுதுணையாக இருந்தார்.

     1991-ல் ஜெயலலிதா முதல்வரானார். சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தனது வளரப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா அவருக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தினார். இது அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த 5 ஆண்டுகளில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

     இதன் விளைவாக 1996 தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து சசிகலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். சுதாகரனைத் தனது வளர்ப்பு மகன் இல்லை என்றும் அறிவித்தார். ஆனால் சில மாதங்களிலேயே போயஸ் தோட்ட இல்லத்துக்கு சசிகலா திரும்பினார்.

     அதன்பிறகு சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனை ஜெயலலிதா மேலவை உறுப்பினராக்கினார். சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் சில ஆண்டுகள் கட்சிப் பொறுப்பில் இருந்தார்.

     கடந்த 2011-ல் ஜெயலலிதா முதல்வரானதும் சில மாதங்களிலேயே சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் அனை வரையும் கட்சியில் இருந்து நீக்கினார். போயஸ் தோட்டத்தில் இருந்தும் அவர்கள் வெளியேறினார். ஆனால், 10 மாதங்களில் மீண்டும் சசிகலா போயஸ் தோட்ட இல்லம் திரும்பினார்.

 

     அதன்பிறகு அதிமுகவிலும், ஆட்சியிலும் சசிகலாவின் செல்வாக்கு அதிகரித்தது. அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்குதான் பதவி வழங்கப்படுகிறது என பேசப்பட்டது. இந்நிலையில் உடல்நலக் குறைவினால் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

     அதனைத் தொடர்ந்து சனவரி 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற அதிமுக சட்டமன்றஉறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

     திருத்துறைப்பூண்டியில் பிறந்த சசிகலா படிப்படியாக வளர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

முன்னால் முதல்வரோடு இருந்தார் என்பதற்காக முதல்வர் பதவியா!

என்று சசிகலா அவர்களுக்கு முதல்வர் பதவி என்பதை செரிமானம் செய்து கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

     தமிழக முதல்வராகிறவர் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்து நடுவண் அரசுக்கு சோரம் போகாதவர்களாக இருக்க வேண்டும்.

     அப்படி நடுவண் அரசுக்கு சோரம் போன காரணத்தால் தான்-

1.    கல்லணை மணல் மேட்டில் புதைக்கப் பட்ட வெற்றுக் கட்டிடமாக இன்றைக்கு காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விவசாயியின் தற்கொலை செய்தியாகிறது.

2.    தமிழருக்குச் சொந்தமான கட்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டு ஒவ்வொரு நாளும் மீனவர் வாழ்க்கை வாழ்வா? சாவா போராட்டமாக இருந்து கொண்டிருக்கிறது.

3.    கடந்த முன்றாண்டுகளாக நமது பண்பாட்டு விழா பொங்கல்- பாரம்பரிய வீரவிளையாட்டு இல்லாமல் கலை இழந்து இருந்தது.

4.    நமது விளைபொருட்கள் சந்தையில்லாமல் மதிப்பற்ற பொருள்களாகிப் போக பீட்சாவும் பர்கரும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

5.    நமது குழந்தைகள் உயிர்ச்சத்துள்ள நமது நாட்டு மாட்டுப்பாலை அருந்தாமல் அயல்நாட்டுத் துகள் பாலை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

6.    மருத்துவ குணமுள்ள நாட்டுக் கோழியை, நாட்டுக் கோழி முட்டையை விட்டு விட்டு நோய்தரும் பிராய்லர் கோழியைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

பட்டியலிடப் பட்டியலிடப் நீண்டு கொண்டேதான் போகும்.

     இந்த உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நமது இளைஞர்கள் அறவழிப் போராட்டத்தில் மெரினாவில் குவிந்தார்கள்.

     செயலலிதாவிற்கு பிந்தைய இந்த அதிமுக வெற்றியை வாங்கியும் கொடுத்தது; நடுவண் அரசுக்கு சோரம் போய் நமது உணர்வுகளை இழிவும் படுத்தியது.

     தொடர்ந்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சி நடத்துமா? நடுவண் அரசுகளுக்கு தொடர்ந்து சோரம் போகுமா?

என்பது மட்டுந்தான் நம்முன் நிற்கும் கேள்வி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.