22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே எரிபொருளை மிச்சம்பிடித்து காட்டலாம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். யுவராஜ் மேலும் கூறியதாவது: 80 கிமீக்கு மேல் வேகமாக போகக்கூடாது என்கிற நடைமுறையில், சேலம்-சென்னை நடுவே புதிய 8 வழிச்சாலையில் 3 மணி நேரத்தில் சென்னை சென்றுவிடலாம் என்றால், இருக்கிற சாலைகளை அந்த நிலைக்கு மாற்ற என்ன தடை. இப்போதுள்ள சாலைகளில் சுங்க வசூல் நடக்கிறது. ஆனால், சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. 8 வழிச்சாலை போடுவதற்கு முன்பாக சென்னை-திண்டிவனம் நடுவேயான சாலையில் எந்த வேலையும் நடக்கவில்லை. ஆனால் 10 ஆண்டுகளாக பணம் வசூலிக்கிறார்கள். இதை 6 வழிச்சாலையாக மாற்றினால், சேலத்திற்கு 2 மணி நேர பயண காலத்தை மிச்சப்படுத்த முடியும். வானகரம்-வாலாஜா நடுவே 96 கி.மீ 4 வழிச்சாலையாக உள்ளது. இதை 6 வழிச்சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ மாற்றினால் ஒன்றரை மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம். உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை வெறுமனே ஒருவழிச் சாலையாக உள்ளது. இதை 4 அல்லது, 6 வழிச்சாலைகளாக விரிவுபடுத்தினால் ஒரு மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்த சாலைகள்தான் முதன்மையானவை. ஏற்கனவே இந்த சாலைகளில் 10 ஆண்டுகளாக பணம் வசூலிக்கப்பட்டு கோடிக்கணக்கில் குவிந்துள்ளது. எனவே புதிதாக பணம் ஒதுக்க கூட தேவையில்லை. இந்த சாலைகளை விரிவுபடுத்துங்கள். நேரத்தையும், எரிபொருளையும், நாங்கள் மிச்சப்படுத்தி காட்டுகிறோம். இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,840.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



