நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களுக்கெல்லாம் கட்சி, கட்சி பதவி ஒரு கேடா? முன்பகை காரணமாம். வளருமா இப்படியும் ஓர் முன்பகை? பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைத் துடிக்கத் துடிக்கப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யும் அளவிற்கு? பகையாளியின் மகள் என்கிற காரணமாம். 28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை எரித்துக்கொன்ற அதிமுக முன்னாள் ஒன்றிய பகுதித் தலைவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர் வீட்டின் அருகே சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகன் அகவை 51, என்பவருக்கும் முன் பகை இருந்து வந்ததாம். ஏற்கெனவே ஒரு சிக்கலில் ஜெயபாலின் தம்பியை முருகன் வெட்டியதாக வழக்கு உள்ளது. இதில் காவல்துறையில் ஜெயபால் புகார் அளித்ததால் அவர் மீது முருகன் கடும் கோபத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஜெயபாலின் கடைக்கு வந்த முருகன், பெட்டிக்கடையில் இருந்த ஜெயபாலின் மகனைத் தாக்கியுள்ளார். இதில் கடுமையாகக் காயமடைந்த ஜெயபாலின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஜெயபால் சென்றிருந்தார். அவரது மனைவியும் வெளியில் சென்றிருந்த நிலையில் கடையில் ஜெயபாலின் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முருகனும், அவரது கூட்டாளி யாசகம் என்கிற கலியபெருமாள் (60) இருவரும் அப்பா எங்கே என்று கேட்டுத் தகராறு செய்துள்ளனர். பின்னர் மாணவியை அவரது வீட்டுக்கு இழுத்துச் சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த நிலையில் அவளது வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்த மாணவியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய விழுப்புரம் குற்றவியல் அறங்கூற்றுமன்ற நடுவர் அருண்குமாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார். அதில், கடையில் தனியாக இருந்த தன்னை அங்குவந்த முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் தாக்கி வீட்டுக்குள் இழுத்துச் சென்றனர். பின்னர், தனது கைகளைக் கட்டி, வாயில் துணியை அடைத்து, தலையில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர் என்று கூறினார். மாணவி மரண வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில் அதிமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகனும், கலியபெருமாளும் கைது செய்யப்பட்டனர். மாணவி மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80 விழுக்காட்டு தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தையின் மேல் உள்ள பகையால் அவரது மகனைத் தாக்கியதும், அப்படியும் கோபம் அடங்காமல் மகளைக் கொடூரமாகத் தீவைத்துக் கொன்ற நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி உள்ளது அதிமுக தலைமை.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட காரணத்தாலும், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கலியபெருமாள் (சிறுமதுரை புதுக்காலனி கழகச் செயலாளர்), முருகன் (சிறுமதுரை காலனி கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.