முதல்வராக கர்ம வீரர் காமராசர் பதவியேற்ற முதல் ஆண்டு. அப்போது இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் ஒதுக்கீட்டுக்கு உண்டு. ஆனால் நூறு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர் மேசையில் வைத்தார் முதன்மைச் செயலாளர். அப்போது காமராசர் கேட்டார் இது என்ன கோப்புகள் என்று. அதற்;கு முதன்மைச் செயலாளர் சொன்னார், அய்யா ஒவ்வொரு ஆண்டிலும் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் ஒதுக்கீட்டுக்கு உண்டு அதற்கு மாவட்ட விரியாக நூறு தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளன. இதில் இருபது விண்ணப்பங்களை நீங்கள் பொறுமையாக தேர்வு செய்து தாருங்கள் எனவும் இதற்;கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் சொன்னார் முதன்மைச் செயலாளர். அதற்குக் காமராசர், நேரம் எதற்கு உடனே தருகிறேன் என்று விண்ணப்பங்களைப் பார்க்கிறார் இருபதை தேர்வு செய்து முதன்மைச் செயலாளரின் கையில் கொடுத்தும் விடுகிறார். முதன்மைச் செயலாளருக்கு ஒரே ஆச்சரியம். முதல்வரை பார்த்து கேட்கிறார் எதை வைத்து உடனே விண்ணப்பங்களை தேர்வு செய்தீர்கள் என்று. அதற்கு காமராசர் சொல்கிறார் ‘பெற்றோர் கையொப்பம்’ என்ற இடத்தில் யாரெல்லாம் ‘கைரேகை’ வைத்திருக்கிறார்களோ அவற்றைத்தான் தேர்ந்தெடுத்தேன்; மேலும் முதல்தலைமுறையில் படிக்காதவர்கள் வீட்டு பிள்ளைகள் அடுத்த தலைமுறையிலாவது படித்து முன்னேறட்டுமே என்று காமராசர் சொன்னவுடன் கண்கலங்கி நின்றாராம் முதன்மைச் செயலாளர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



