அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே தமிழக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக வரும்போதே நிம்மதி பெருமூச்சுவிடமுடியும். தமிழக அரசு இதைக் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும். 04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருச்சி, கோவை, நெல்லை, சென்னை என பல இடங்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பிவருகின்றனர். இன்னும் மூன்று நாள்களில் மேலும் படிப்படியாக குறைந்து கொரோனா பாதிப்பு விரைவில் சுழியத்தை எட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆய்வின் முடிவில் அறியப்படுவது:- தமிழகம் குறைவான சோதனைகளைச் செய்து விட்டு, அதாவது வேறு கோணத்தில் சொன்னால், சோதனையே செய்யாமல் கொரோனா இல்லையென்று சொல்லப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இது ஆபத்தானது என்றும், கொரோனா சோதனைகளை அதிகப் படுத்துங்கள் என்றும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதை மறுத்து, தமிழக அரசு தெரிவிக்கும் காரணங்கள் திருப்தியாக இல்லை. இந்தியாவில் மொத்தமாக அரசு, தனியாரிடம் சேர்த்து 257 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில்தான் அதிக பரிசோதனை மையங்கள் உள்ளன என நலங்குத் துறைச் செயலாளரும், அமைச்சரும் கூறி வந்தநிலையில் நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் 34 பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் 26 மையங்களும், உத்திரபிரதேசம் டெல்லியில் தலா 17 மையங்களும், கேரளாவில் 12 மையங்களும் உள்ளன. ராஜஸ்தானில் 9 பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் 10 லட்சம் பேரில் 170 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 10 லட்சம் பேரில் 450 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் 388 பேருக்கும், மகாராஷ்டிராவில் 369 பேருக்கும் இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேரில் 257 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படுகிறது. பீகார், சத்திஷ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 60 பேருக்கு குறைவாகவே சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குணமடைந்து வீடு திரும்புவர்களின் பட்டியலிலும் கேரளா முதலிடம் வகிக்கிறது. கேரளாவில் பாதிக்கப்பட்டோரிலிருந்து 56விழுக்காட்டு பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது கர்நாடகாவில் 29 விழுக்காடாகவும், தெலுங்கானாவில் 18.5 விழுக்காடாகவும், மகாராஷ்டிராவில் 10 விழுக்காடாகவும், உள்ளது. தமிழ்நாட்டில் 9.5 விழுக்காட்டு பேர்கள் மட்டுமே குணமடைந்து வீடு திரும்புகின்றனர். டெல்லியில் 2.5 விழுக்காட்டு பேர்கள் குணமடைந்துள்ளனர். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை 25 ஆயிரத்து 005 மாதிரிகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 1267 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரத்து 743 பேருக்கு பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுவதில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைவிட தமிழ்நாடு மிகவும் பின் தங்கியே உள்ளது. மகாராஷ்டிராவில் 56 ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் குறைவாகவே தமிழ்நாட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மிகச் சிறிய மாநிலமான டெல்லியில் நேற்று நிலவரப்படி 18 ஆயிரத்து 784 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் ஒரு நாளுக்கு 5320 சோதனைகள் வரை செய்ய முடியும் எனக் கூறியிருந்தார். சராசரியாக அரசு சோதனை மையங்களில் 270 மாதிரிகளும், தனியாரில் 100 மாதிரிகளும் சோதனை செய்யமுடியும் என தெரிவித்திருந்தார். தற்போது சோதனை மையங்கள் அதிகரித்திருந்தாலும் ஏப்ரல் 12க்கு முன்னரும் கணிசமான அளவு, சோதனை மையங்கள் தமிழக அரசிடம் இருந்தது. சனவரி மாதமே இதை எதிர்கொள்ள தயாராகிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அப்படியிருக்க ஏன் அதிகளவிலான சோதனைகள் நடைபெறவில்லை என்ற கேள்வியை தற்போது வரும் அதிர்ச்சி செய்திகளே ஏற்படுத்துகின்றன. கொரோனா அறிகுறிகள் வந்தால்மட்டுமே சோதனை செய்வோம் என தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அறிகுறிகள் வரும் வரை காத்திருந்து சோதனை செய்வதற்குள் கொரோனா நுண்ணுயிரி ஒருவர் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு பரவிவிடும் என்று அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைமைகளே கூறிவரும் நிலையில் இன்று நெல்லையில் நடைபெற்ற நிகழ்வு அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. நெல்லை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி பஞ்சாப்பில் உள்ள பல்கலைக் கழகத்தில் தனது சகோதரியின் உயர் கல்விக்காக சென்றிருந்தார். மார்ச் 13ஆம் தேதி சென்ற அவர் மூன்றாம் கிழமையில் நெல்லை திரும்பினார். வெளி மாநிலங்கள் சென்றவர்கள் கட்டாயம் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு நலங்குத் துறை கூறியதை கறாராக அதன் ஊழியர்கள் கடைபிடிக்கின்றனர். அதற்கு அந்த பெண்மணியும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். 14 நாட்கள் கண்காணிப்பில் அவருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் ஏற்படவில்லை. இதனால் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனால் முந்தாநாள் இரவு பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25 நாட்கள் கழித்து அறிகுறிகள் தென்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் அவர் தமது கட்டாயத்தேவைகளுக்காக அருகிலுள்ள காய்கறி, பலசரக்கு கடைகளுக்குச் சென்றுள்ளார். தற்போது அவர் சென்று வந்த இடங்கள் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அவசர அவசரமாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கண்காணிப்புக்கு மட்டும் உட்படுத்தப்படாமல் உடனே கொரோனா சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. நெல்லை கிருஷ்ணாபுரத்தில் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படுவதுடன் அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். நிலைமை இப்படியிருக்க அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக வரும்போதே நிம்மதி பெருமூச்சுவிடமுடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



