Show all

கனிமொழி தினகரன் ஆகியோர் கண்டனம்! சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்கள் நீக்கம், மனசாட்சியற்ற செயல்

பொங்கல் திருவிழா நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என கண்டனங்கள் எழுப்;பப்பெற்று வருகின்றன.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையாக உழைத்த சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் 700 பேர் திடீரென வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், கொரோனா நேரத்தில் நாடே அவர்களை பாராட்டியது, அவர்களுக்கு நாம் காட்டும் நன்றிக்கடன் இதுதானா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

குப்பை அள்ளும் பணி தனியாருக்கு கொடுக்கப்பட்டதாலேயே அவர்கள் பணி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களை தனியார் குப்பை அள்ளும் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்ததால் அங்குள்ள நிரந்தப்பணியாளர்களை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் அங்கு பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாள் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் நேற்று அனைவரும் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர்களுக்கு பணி வழங்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்து கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.

பொங்கல் விழா நேரத்தில் சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தினகரன் கீச்சுவில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளர்களாக நின்ற தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. என்பதாகும்.

அதிலும் பொங்கல் திருவிழா நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன் என்று மற்றொரு கீச்சில் தெரிவித்துள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.