தமிழகத்தில் மே
15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து
மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது இன்று (திங்கள்கிழமை) விசாரணை
நடைபெற்றது. அப்போது, நீதிஅரசர்கள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம்
அடங்கிய அமர்வு முன், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார்,
வரும் மே 15-க்குள் உள்ளாட்சித் தேர்தல்
நடத்தப்படும் என உறுதியளித்தார். தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த
அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்
நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே
வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுதாக்கல்
செய்தனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு
உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில்
ஆர்.எஸ்.பாரதி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிஅரசர் என்.கிருபாகரன் விசாரித்தார்.
‘அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள்
முறையாக பின்பற்றப்பட வில்லை’ என்று கூறி, நடக்கவிருந்த
உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, அக்டோபர் 4-ல் உத்தரவிட்டார். டிசம்பர் 31-க்குள்
தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும்
உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில்,
மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு நீதிஅரசர்கள் நூட்டி ராமமோகன
ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, கோட்ட அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது,
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெரிவிக்கும்படி, கோட்ட அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடந்த மாத இறுதியில் இந்த வழக்கு
மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்
குமார், அவகாசம் கோரினார். பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். விசாரணையை,
பிப்., 10க்கு (இன்று), கோட்ட அமர்வு தள்ளிவைத்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மே மாதம்,
15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில்
தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை, ஏற்க மறுத்த நீதிமன்றமோ, ‘உத்தேச தேதி தேவையில்லை உறுதியான தகவலை சொல்லுங்கள்’
என கண்டனம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



