Show all

அவென்ஞ்சர் போல அழகாக வந்திருக்கிறது! தூத்துக்குடி போராட்ட- துப்பாக்கிச்சூட்டின் முதல் தகவல் அறிக்கை

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்ன என்ற விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை தூத்துக்குடி துணை வட்டாட்சியர் விளக்கியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பேரணியின் போது காவல்துறை அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 13 பேர் மரணம் அடைந்தனர்.

இந்தத் துப்பாக்கி சூடு நடந்த உத்தரவிட்டது யார் என்றே தெரியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்து இருந்தார். தற்போது இந்த துப்பாக்கி சூட்டை நடத்த ஆணையிட்டது யார், என்ன காரணம் என்று விளக்கம் சோடிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது இரண்டு பேர் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.தூத்துக்குடி தனி வட்டாட்சியர் சேகர், 2.மண்டல் துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடுக்கான காரணத்தையும் அதில் விளக்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் 10,000க்கும் அதிகமான 'சமூக விரோதிகள்' கலகத்தை ஏற்படுத்தும் வகையில், (அயல் கோளில் இருந்து திடீரென வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு குதித்தார்கள்.) கலைந்து செல்லும்படி கூறியும் செல்லவில்லை. வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் யாரும் செல்லவில்லை. சமூக விரோதிகள் கலைந்து செல்லவே இல்லை.

கண்ணீர் புகை குண்டு, லத்தி சார்ஜ், ரப்பர் குண்டு என எல்லா முறைகளையும் பயன்படுத்தியும் (அதற்குள் அந்த அயல் கிரகத்து மனிதர்கள், தங்கள் அதித விஞ்ஞான ஆற்றல் மூலம் வெறுங்கையோடு குழந்தை குட்டிகளோடு போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் அரிவாள், கத்தி, கம்பு, பெட்ரோல் குண்டுகள் முகத்தை மறைத்துக் கொள்வதற்கு முகமூடிகள் என்று பல்வேறு ஆயுதங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஆயுதம் கிடைக்கப் பெற்றவர்களான) மக்கள் கலையவில்லை. கலவரம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரிவாள், கத்தி, கம்புகளுடன் மக்கள் காவல்துறையனரைத் தாக்கினார்கள். அரசு அலுவலகத்தை பெட்ரோல் குண்டுகளுடன் மக்கள் முற்றுகையிட முயற்சித்தார்கள்.

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள். திரேஸ்புரத்தில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் கலவரம் செய்தனர். 100 பெண்கள் உட்பட 500 பேர் வரை காவல் நிலையத்தில் நுழைய முயன்றனர். கலவரக்காரர்கள் காவல்துறையினரை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் பிரச்சனையாகும் என்று துப்பாக்கி சூடு நடத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தூத்துக்குடி துணை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். 

(துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதும் அயல் கிரகத்தில் இருந்து குதித்த பத்தாயிரத்திற்கு அதிகமான சமூக விரோதிகள் ஒருவர் கூட துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகாமல், இலாவகமாக எம்பி அயல் கோளுக்குப் பயணித்து விட்டதால் அத்தனைக் குண்டுகளும், 100 பெண்கள் உட்பட 500 பேர் வரை காவல் நிலையத்தில் நுழைய முயன்றார்கள் அல்லவா அவர்கள் மீதே தாக்கியது. 13பேர்கள் பலியானார்கள் எழுபதுக்கும் மேலானோர் காயம் பட்டார்கள். பத்தாயிரம் சமூக விரோதிகள் காவல்துறை கட்டுப் பாட்டை மீறி நாட்டுக்குள் உலாவி வந்தால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று உடனே ஆட்சியைக் கலைத்து விடலாம் தான். ஆனால் அந்த பத்தாயிரம் சமூக விரோதிகளும் அயல் கோளைச் சேர்ந்த மனிதர்கள் தானே. இனிமேல்தான் நடுவண் அரசுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்து, அவன்ஞ்சர் முடிவற்ற போரின் இயக்குநரையோ, நாசாவையோ உதவிக்கு அழைக்க வேண்டும்.)

சில செய்திகளைச் சேர்த்து எழுதினால் தான் காவல் துறையினரின் இந்த முதல் தகவல் அறிக்கை நிறைவடைகிறது என்பதால் அந்தச் செய்திகளை அடைப்பு குறிகளுக்குள் நாம் சேர்த்து வெளியிட்டிருக்கிறோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,801.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.