Show all

வைகோ இரங்கல்!அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னைத் தாக்கியது; நிலைகுலைந்தேன்; உள்ளம் உடைந்தேன்

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாஜ்பாய் மறைவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளியும், கோடானு கோடி மக்களின் இதயத்தில் இடம்பெற்றவருமான மாபெரும் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னை தாக்கியது. நிலைகுலைந்தேன், உள்ளம் உடைந்தேன்.

நாற்பது ஆண்டுகளாக அவரிடம் நெருங்கிப் பழகி, என் தகுதிக்கு மீறிய அன்பை அவரிடமிருந்து பெற்றவன் நான். ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அற்புதமாக உரையாற்றக் கூடியவர். ஜனசங்கத்தைக் கட்டிக் காத்த தலைவர்களில் ஒருவர். தலைசிறந்த கவிஞர், நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

வங்கதேச யுத்த வெற்றிக்குப் பின், தலைமை அமைச்சர் இந்திரா காந்தியை நாடாளுமன்றத்தில், துர்காதேவியே, வெற்றித் தேவைதையே என வாழ்த்தியவர். இந்தியாவின் அனைத்துத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அண்ணாவிடம் மிக்க அன்பு காட்டியவர்.

டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, கி.வீரமணியுடன் சென்று நான் வாதாடியபோது, மீண்டும் பெரியார் மையம் எழுப்ப உன்னதமான ஒரு இடத்தை வழங்கினார். நெருக்கடி நிலை காலத்தில் 18 மாதம் பெங்களூரு சிறையில் வாடினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது, அக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் மதித்து அரவணைத்து கருத்துகளைப் பரிமாறி, ஒரு கூட்டணி ஆட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார்.

பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை சென்னை கடற்கரையில் மதிமுக நடத்தியபோது, என் கோரிக்கையை ஏற்று, சேது சமுத்திர திட்டத்தை நடுவண் அரசு நிறைவேற்றும் என்று பிரகடனம் செய்தார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை நடுவண் அரசு தனியார் மயமாக்க முடிவெடுத்த பின்னர், எளியேனின் வேண்டுகோளை ஏற்று, அந்த முடிவை ரத்து செய்ததை நினைக்கும்போதே என் கண்கள் குளமாகின்றன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தன் வேதனையையும், எதிர்ப்பையும் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்தார். ஈழத் தமிழர் பிரச்சினையில் மாநிலங்கள் அவையில் நான் உரையாற்றிய போதெல்லாம் என்னை அவர் ஆதரித்துப் பேசியதை மறக்க முடியுமா?

அனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் இலங்கை அரசுக்கு எவ்விதத்திலும் இந்திய அரசு உதவி செய்யாது; ஆயுதங்களை சிங்கள அரசுக்கு ஒருபோதும் விற்பனை செய்யாது என்று கொள்கை முடிவை அறிவித்தார்.

நானும், சகாக்களும் பொடா கைதிகளாக சிறையில் இருந்தபோது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்பபடி குற்றம் ஆகாது என்று இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு நடவடிக்கை எடுத்தவர் வாஜ்பேயி என்பதை நன்கு அறிவேன்.

டெல்லியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் என் தகுதிக்கு மீறி மற்றவர்கள் உரையாற்றியதற்குப் பின்னர் என்னை உரையாற்ற வைத்து ரசித்துப் பாராட்டியதை எப்படி மறப்பேன்?

தன் வாழ்வையே நாட்டுக்காக, கோடானு கோடி மக்களுக்காக அர்ப்பணித்து, தனக்கென்று ஒரு இல்லற வாழ்வை அமைத்துக்கொள்ளாத உத்தமத் தியாகி ஆவார். அவர் தலைமை அமைச்சராக இருந்தபோது, ஈழத்தமிழர்களுக்கு செய்த பல உதவிகளை நான் நன்கு அறிவேன்.

ஆண்டன் பாலசிங்கத்தை இந்தியாவுக்கு வரவழைத்து சிகிச்சை தருவதற்கும் தயாரானார். அந்தச் செய்தியை நான் சேர்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பாலசிங்கம் கிளிநொச்சியை விட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

அவருடைய முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் டெல்லியில் அவர் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி என் மகள் கண்ணகியின் திருமண வரவேற்பாகும்.

இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதை பொக்ரான் சோதனையின் மூலம் உலகத்துக்கு நிருபித்தார். இந்தியாவின் சாலைக் கட்டமைப்பை வலுப்படுத்த நாடு முழுக்க தங்க நாற்கரச் சாலைக்கு காரணமானார்.

கடந்த எட்டாண்டு காலமாக அவர் நினைவு குறைந்து படுத்த படுக்கையானபின், நான் டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்துக்குச் சென்று, அவரது படுக்கையின் அருகில் நின்று, கரம் கூப்பி வணங்கிவிட்டு பொங்கும் விழிநீரைத் துடைத்துக்கொண்டு வருவேன்.

முதல் இரண்டு ஆண்டுகளில் நான் அருகில் சென்றால் திக்கித் திக்கி என் பெயரை உச்சரிக்க முனைவதும், அவர் முகத்தில் பரவசம் பரவுவதையும் அங்கு இருப்பவர்களே சொல்லி வியந்தார்கள்.

வைகோவை என் மகனாகவே கருதுகிறேன், என்று கூறுகிற அளவுக்கு அம்மாமனிதரின் உள்ளத்தில் எனக்கு ஒரு இடம் கிடைத்தது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

இந்திய அரசியலில் பேரொளியாய் பிரகாசித்த ஜனநாயகச் சுடர் அணைந்துவிட்டது; துக்கம் தாங்கமுடியாமல் தவிக்கிறேன். துயர் சூழ்ந்துள்ள வேளையில் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதாவுக்கும், அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கும், அவர்களின் புதல்விக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பாஜக நண்பர்களுக்கும், அத்தலைவரை மதித்து நேசித்த கோடானு கோடி மக்களுக்கும் மதிமுக சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,881.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.