இந்தியப் புலனாய்வுத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு அடுத்த மாதம் 25 அன்று அறிவிக்கப்படும் என இந்தியப் புலனாய்வுத்துறை அறங்கூற்று மன்ற சிறப்பு அறங்கூற்றுவர் ஓ.பி. சைனி தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் நடுவண் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும் ஸ்வானி டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் இந்தியப் புலனாய்வுத்துறை வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கில் 2011, ஏப்ரலில் இந்தியப் புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை பதிகை செய்தது. அதில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை நடுவண் தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் நடுவண் அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஏடிஏஜி தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 இந்தியப் புலனாய்வுத்துறை தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4 ஆயிரம் பக்கங்கள் அறங்கூற்றுமன்ற விசாரணையின்போது பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்தியப் புலனாய்வுத்துறை தொடுத்துள்ள மற்றொரு வழக்கில் எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும், அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் இந்தியப் புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை பதிகை செய்தது. நடுவண் அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும், ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டோர் அனைத்து தரப்பு வாதங்களும் தில்லி இந்தியப் புலனாய்வுத்துறை அறங்கூற்றுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 26 அன்று நிறைவடைந்தது. மீண்டும் இந்த வழக்கு கடந்த ஜூலை 5 க்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அறங்கூற்றுவர் ஓ.பி. சைனி, ‘இந்த வழக்கில் தீர்ப்பு எழுத ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு ஆகஸ்ட் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ அளிக்கப்படும். வழக்கில் தீர்ப்பு தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டோரும், புலனாய்வு அமைப்புகளும் அறங்கூற்றுமன்றத்தில் ஏதேனும் பதிவு செய்ய விரும்புவோர் ஆகஸ்ட் 25 க்குள் எழுத்தில் பதிகை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாடு முழுக்க பெரும் பரபரப்புடன் எதிர்பாக்கப்பட்டுள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கும் நாள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்தியப் புலனாய்வுத்துறை அறங்கூற்றுமன்ற சிறப்பு அறங்கூற்றுவர் ஓ.பி. சைனி அறிவித்திருந்தார். எனவே குற்றம்சாட்டப்பட்ட தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தங்கள் தரப்பு இறுதி விளக்கத்தை இன்று பதிகை செய்ய வாய்ப்பு ஒரு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு அடுத்த மாதம் 25 அன்று அறிவிக்கப்படும் என இந்தியப் புலனாய்வுத்துறை அறங்கூற்று மன்ற சிறப்பு அறங்கூற்றவர் ஓ.பி. சைனி தற்பொழுது தெரிவித்துள்ளார்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



