Show all

இன்று பிள்ளையார் சதுர்த்தி!

தை ஒன்று, ஆடி பதினெட்டு என்று நாளின் அடிப்படையில் விழா கொண்டாடுவது தமிழர் மரபு ஆகும். இன்று பிள்ளையார் சதுர்த்தி. பிள்ளையார் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. திதி என்கிற நிலா நாளை வைத்துக் கொண்டாடும் விழாக்கள் ஆரியர்கள் மரபுக்கானவை.

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று பிள்ளையார் சதுர்த்தி. பிள்ளையார் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. திதி என்கிற நிலா நாளை வைத்துக் கொண்டாடும் விழாக்கள் ஆரியர்கள் மரபுக்கானவை. தை ஒன்று, ஆடி பதினெட்டு என்று நாளின் அடிப்படையில் விழா கொண்டாடுவது தமிழர் மரபு ஆகும்.

தமிழ்நாட்டில் பிள்ளையார் கோயில் இல்லாத ஊர் இருக்கமுடியாது என்கிற அளவிற்கு மிக அதிகமான பிள்ளையார் கோயில்களைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. ஆனாலும் இந்தப் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டம் ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு பேரளவாகக் கொண்டாடப்பட்டது இல்லை.

தமிழ்நாட்டில் குறிஞ்சித்திணைத் தெய்வமாக சேயோன் நிறுவப்பட்டுள்ளார். சோயோனைப் பிள்ளையார் என்றும் அழைக்கிற வழக்கம் உண்டு. சோயோன் அல்லது பிள்ளையார் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் வகைக்கான தெய்வமாக தமிழர் நிறுவியுள்ளனர். ஆகவே உருத்திரம் என்றாலும் இந்த சேயோன் அல்லது பிள்ளையாரையே குறிக்கும். அதனால்தாம் பிள்ளையார் சுழியை உருத்திரத்தைக் குறிக்கும் வகைக்கு ‘உ’ என்றே எழுதுகின்றனர். 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். திணைத் தெய்வங்கள் பற்றி தொல்காப்பியம்,
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே” என்கிறது.

இதுபோலவே தமிழர் ஆற்றல் வடிவங்களாகக் கண்டறிந்த ஐந்திர ஆற்றல்கள் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்து ஆகும்.

இந்த ஆற்றல் தொய்ந்தவைகளை தெய்வங்கள் என்றனர். அந்த வகையில் காடும் காடு சார்ந்த முல்லைத் திணைக்கு நீர் ஆற்றல் தொய்ந்த மழையே மாயோன் என்ற பெயரில் தெய்வம், கடலும் கடல் சார்ந்து நெய்தல் திணைக்கு கப்பல் செலுத்தி மீன் பிடிக்க காற்றே தேவை என்கிற நிலையில் அதுவே வருணன் என்கிற பெயரில் காற்றே தெய்வம், சுரமும் சுரம் சார்ந்த பாலைத் திணைக்கு கொற்றவை என்ற பெயரில் தீயே தெய்வம், வயலும் வயல் சார்ந்த மருதத் திணைக்கு நிலத்தை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள வேந்தனே அதே பெயரில் தெய்வம். இவற்றையெல்லாம் நகலெடுத்து தங்களுடையதாக்கிக் கொள்ள பார்ப்பனியர்களுக்கு புரிதலில் குழப்பம் ஏதும் இல்லை. காரணம் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு ஆற்றல்களைப் ஆற்றல்தாம் என்று புரிந்து கொள்வது எளிதுதானே?

ஆனால் ஐந்தாவது ஆற்றலான விசும்பை ஆற்றல் என்று புரிந்து கொள்வதில் இன்று வரையுலுமே பார்ப்பனியர்களுக்குக் குழப்பம் இருக்கிறது. அதனால் விசும்பை வெறுமனே ஆகாயம் என்று அவர்கள் கடந்து செல்வதால்- குறிஞ்சி தெய்வமாக தமிழர் முன்னெடுத்த விசும்பின் ஆற்றல் வடிவமான ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுதும் என்பதில் உள்ள உருத்திரம், கடந்தும் உள்ளும் இருக்கிற கடவுள் என்பதாக சேயோன் மற்றும் பிள்ளையார் ஆகிய ஒரே தெய்வத்தின் மூன்று பெயர்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதனால் உருத்திரத்தை சிவன் என்கிற அப்பாவாகவும். பிள்ளையாரை மகனாகவும் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் சேயோன் என்ற பெயருக்கான முருகனை பேரளவாக கொண்டாடுகிற நிலையில் அவரை பிள்ளையாருக்குப் போட்டியான தம்பியாக உருவகித்து ஞானப்பழம் கதையெல்லாம் கட்டினார்கள். ஆனாலும் பிள்ளையாருக்குப் போட்டியாக அவர்களே முன்மொழிந்த முருகனை அவர்களால் போற்றிக் கொள்ள முடியவில்லை.

ஐந்திரங்களில், மற்ற நான்கு ஆற்றல்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றை இறையென்று ஆற்றல் வடிவங்களாக பட்டியல் இட்டனர் தமிழ் முன்னோர். இந்த நான்கு ஆற்றல்களுக்கு உள்ளேயும் கடந்தும் இருப்பதால், மூன்று நிலைகளை எய்தி 1.இயக்கமில்லமல், 2.இயக்கம்பெற்று 3.இயக்குவதால் இதை ஐந்தாவது இயக்கமாக நிறுவி கடந்தும் உள்ளும் இருக்கிற நிலையில் கடவுள் என்ற ஆற்றல் வடிவமாகப் பட்டியல் இட்டனர்.

புவியின் மீது பரந்திருக்கிற முல்லை மருதம் நெய்தல் பாலைக்கு இறை ஆற்றல் தொய்ந்த தெய்வங்களை கட்டமைத்தனர், ஆனால் புவிக்குள்ளிருந்து எழுந்து வெளியிலும் உயர்ந்து நிற்கிற மலைக்கு கடவுள் ஆற்றல் தொய்ந்த தெய்வத்தைக் கட்டமைத்தனர் தமிழ்முன்னோர்.

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம், அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக உருவாக்கப்பட்ட பிள்ளையார் வட இந்தியாவில் கணபதி, விநாயகர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. வடஇந்தியாவில் விநாயகருக்கு இன்று மிகச் சிறப்பாக பிள்ளையர் சதுர்த்தி விழா முன்னெடுக்கப்படுகிறது.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள்.

பாரதிய இராஷ்ட்ரிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை பொதுமக்களிடையே ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,002.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.