25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க நடுவண் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் செய்திஇதழ் ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதில் 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரும் சிக்கி இருக்கிறது. ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டஸால்ட் நிறுவனம் இதில் நடுவண் அரசு மூலம் பல வகைகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மீடியாபார்ட் என்ற பிரான்ஸ் செய்திஇதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க நடுவண் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும். இல்லையென்றால் ஒப்பந்தம் நடக்காது என்று விதிமுறைகளை மாற்றியதாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த ஆதாரங்களை அந்த செய்திஇதழ் வெளியிட்டுள்ளது. டஸால்ட் நிறுவனம் ஹின்ஸ்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருந்தது. அதை நிறுத்தி பிரதமர் மோடி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளிக்க சொன்னது அம்பலம் ஆகியுள்ளது. ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய துருப்பு சீட்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,937.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.