உருளைக்கிழக்கை முதன்மை உணவாகச் சாப்பிடும் நிலைமைக்கு இலங்கை வந்துகொண்டிருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. உரம் இல்லை- அரிசி உற்பத்தி பாதிப்பு- இறக்குமதி செய்யவும் அண்ணியச் செலாவணி இல்லை- என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது. 15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதான தகவல் உலக நாடுகளின் கவனம்பெற்று வருகிறது. அண்ணியச்செலாவணி கையிருப்பு இல்லை. தூதரக ஊழியர்களுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்கான ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன. இந்தியாவையும் சீனாவையும் உதவிட வேண்டுகோள் விடுப்பதாகத் தகவல். இராஜபக்ச பதவிவிலகப் போவதாகத் தகவல்- இப்படி இலங்கை பொருளாதார நிலைமைகள் குறித்த பற்பல தகவல்கள் உலக நாடுகளின் கவனம்பெற்று வருவதாகத் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில்- அரிசி பற்றாக்குறை காரணமாக உருளைக்கிழக்கை முதன்மை உணவாகச் சாப்பிடும் நிலைமைக்கு வந்துவிட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடையத்தினை தெரிவித்துள்ளார். நாட்டில் உரப் பற்றக்குறை கடுமையாக ஏற்பட்டுள்ளது. ஆயினும் கூட வேளாண்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே 95 விழுக்காடு அறுவடை விரைவில் கிடைக்கும் என்று கூறிவருகிறார். ஆனால் நாட்டின் முதன்மை உற்பத்தி வகையாய் இருக்கிற நீண்டகாலச் சாகுபடி விளைச்சலில் அறுவடைகள் 50 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக வேளாண் பெருமக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், வேளாண் அமைச்சின் நான்கு செயலாளர்கள் பதவிவிலகல் செய்தாலும் வேளாண் அமைச்சின் செயலாளரால் எளிதாகப் பணிகளைச் செய்ய முடியாது. நிலைமையை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. நாட்டில் உரம் இல்லை இப்போது என்ன செய்யவது. நாம் 800,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். தோராயமாக 300 மில்லியன் மதிப்புள்ள அரிசி ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் அரிசி வகைகள் சந்தையில் உள்ளன. இலங்கையில் அண்ணியச் செலாவணி கையிருப்பு இல்லா நிலையில், வரும் ஆண்டில் அரிசியை இறக்குமதி செய்து சாப்பிட முடியாது. அதற்கு கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட இந்த அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். அதை அதிகாரிகளிடம் விட்டு விட்டு தப்பிக்க தயாராக இருக்காதீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,113.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.