அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு ஆயுதங்கள் வழங்கியதாகக் கூறி அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய சகோதரர்களான யாஹ்யா பரூக் முகமது மற்றும் இப்ராகிம் ஜுபையர் முகமது உள்ளிட்ட 4 பேர் மீது அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அல்-கொய்தா தலைவர் அன்வர்-அல்-அவ்லாகிக்கு ஆயுதஉதவி செய்ததாக இவர்களின் நண்பர்கள் ஆசிப் அகமத் சலிம் மற்றும் சுல்தானே ரோம் சலிம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த 4 பேர் மீதும் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்க சதித்திட்டம் தீட்டுதல், மறைத்தல், தீவிரவாதிகளுக்கு நிதிஉதவி செய்தல், நீதியை தடுக்க சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியில் 1000 டாலர்கள் மோசடி செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும் பரூக் மற்றும் இப்ராகிம் ஆகியோர் மீது கூடுதல் நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கடந்த 2002-04 ஆம் கல்வி ஆண்டுகளில் பொறியியல் படிப்பு படித்து வந்த பரூக் பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, அமெரிக்க குடிமகனாக மாறியவர். இல்லினாய்ஸ், அர்பனா-சாம்பைனில் 2001-05 ஆம் கல்வியாண்டில், பொறியியல் படித்த இப்ராகிமும் இவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.