Show all

ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு! இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் மிதக்கும் காற்றாலை அமைகிறது.

இந்தியாவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 34 விழுக்காடு தமிழ்நாட்டின் பங்காக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மிதக்கும் காற்றாலை அமைகிறது.

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் மிதக்கும் காற்றாலை அமைகிறது. டென்மார்க் நாட்டின் உதவியுடன் இந்தக் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் அமைய உள்ளதை சுட்டிக்காட்டி பலரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரை இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி, கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி முனை வரை சுமார் 800 முதல் 1000 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அதிகமாக காற்று வீசுவது வழக்கம். இதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. 

இந்தியாவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 34 விழுக்காடு தமிழ்நாட்டின் பங்காக உள்ளது. தமிழ்நாட்டில் மலை அடிவாரங்களில் மட்டுமின்றி, கடற்கரை அல்லது கடல் பகுதியிலும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

டென்மார்க் நாட்டில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே டென்மார்க்குடன் இது சம்பந்தமாக அரசு கேட்டது. அவர்கள் தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின்சார நிலையங்களை அமைத்து தர முன் வந்துள்ளதுடன், பெரிய அளவில் முதலீடும் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அங்குள்ள தீவுகளிலும் முதற்கட்டமாக காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர தமிழ்நாட்டில் காற்று அதிகம் வீசக்கூடிய கடற்கரைகளைத் தேர்வு செய்து அங்கும் காற்றாலைகளை அமைக்க டென்மாக் அரசு முடிவு செய்துள்ளது. 

டென்மார்க்கில் கடலில் மிதக்கும் காற்றாலைகள் அதிகமாக உருவாக்கப்படுகிறது. அதேபோல இங்கும் மிதக்கும் காற்றாலைகளை அமைத்துக்கொடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசுவதற்காகத்தான் டென்மார்க் மின்சக்தி அமைச்சர் ஜானிக் ஜோர்சென்சன் தலைமையில் 50 பேர் கொண்ட குழு அண்மையில் தமிழ்நாடு வந்திருந்தது. புதன்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசிய குழுவினர், தமிழ்நாட்டில் எந்த மாதிரியான காற்றாலைகளை அமைப்பது? எவ்வாறு அவற்றை செயல்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசித்தார்கள். விரைவில் எங்கெல்லாம் மிதக்கும் காற்றாலைகள் அமையப்போகிறது என்பது இறுதி செய்யப்பட உள்ளது. 

இந்தத் திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளது. கடலில் அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,002.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.