Show all

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33விழுக்காடு குறைந்துள்ளது! வெளியானது தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33விழுக்காடு குறைந்துள்ளது பெட்ரோல் டீசல் வரி வருமானத்தில் ரூபாய் 31.50 ஒன்றிய அரசு வைத்துக் கொண்டு வெறுமனே 50காசுகள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கொடுத்து வருகிறது என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கையில்.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தற்போது திமுக தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு விட்டு சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கை, வரவுசெலவுத் திட்டப் பதிகைக்கு முன் வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். 

அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை வரவுசெலவுத்திட்டம் பதிகை செய்திட உள்ள நிலையில், இன்று 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை காலை 11:30க்கு நிதியமைச்சர் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில், தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
செய்தியாளர்களிடம் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு பலரும் உதவி செய்தனர். அறிக்கை தயார் செய்வதற்கு முன் ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும், பத்தாண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சி ஏற்பின் போது வெளியிட்ட அறிக்கையையும் ஆய்வு செய்தோம். 

இணையதளத்திலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம். வெள்ளிக்கிழமை வெளியிட உள்ள வரவுசெலவுத்திட்டத்தில் முழுமையான திட்டங்களை வெளியிடுவோம். அதன்பின் தான் திமுகவின் புதிய திட்டங்கள் குறித்து தெரியும்.

வருமானம் மிகவும் சரிந்துவிட்டதே நிதிநிலையின் முதன்மைச் சிக்கலாக உள்ளது. 2006-11 கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழக அரசின் வருமானம் உபரியாக இருந்தது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருமான பற்றாக்குறை ஏற்பட்டது. 2016-21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையே ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு அதிகமாகக் கடன் வாங்கியுள்ளது. மேலும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது. அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது. 

கொரோனாவுக்கு முன்பே தமிழ்நாட்டின் வருமானம் பெருமளவு சரிந்துவிட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தநிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது. 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின்; தலா ஒரு குடும்பத்துக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளது.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரியாக பேணப்படவில்லை. அதிமுக அரசின் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் போது நிதிப் பற்றாக்குறை ரூ.4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது. ஆனால், உண்மையில் தமிழ்நாட்டு அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90 சதவீதம் மின்வாரியத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் எச்சரிக்கை நிலையை காட்டுகின்றன. 2020-21ல் மட்டும் தமிழக அரசின் வருவாய் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 8.7 விழுக்காடாகச் சரிந்துவிட்டது.

தமிழ்நாட்டின் வருவாய் படிப்படியாக குறைந்து வருகிறது. 2008-09 திமுக ஆட்சியின்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வருவாய் 13.35 விழுக்காடாக இருந்தது. 2011 வரை திமுக ஆட்சியில் 11.41 விழுக்காடாக இருந்த வருவாய், அதிமுக ஆட்சியில் 3.8 விழுக்காடாகச் சரிந்துள்ளது. உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவுக்கு கூட வரி வருவாய் இல்லை. 2006-11 திமுக ஆட்சியில் 7.98 விழுக்காடாக இருந்த வரி வருவாய் அதிமுக ஆட்சியில் 6.15 விழுக்காடாகச் சரிந்துவிட்டது. அதேபோல், வணிக வரி மூலம் கிடைக்கும் நிதி 4.49 விழுக்காட்டில் இருந்து 4.19 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33 விழுக்காடு குறைந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து வரியை வசூலிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். 

சுழிய வரியால் பயனடைவது பணக்காரர்கள் மட்டுமே, ஏழைகள் அல்ல. பெரு நிறுவனங்களுக்கான வரி, வருமானவரியை குறைத்து சரக்குசேவை வரியை ஒன்றிய அரசு அதிகரித்திருப்பது பாதகமான செயல். சரக்குசேவைவரி நிலுவைத் தொகை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி உள்ளது.

ஒன்றிய அரசு செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை வெகுவாக குறைத்துவிட்டது. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய வரிப்பங்கு 33 விழுக்காடு குறைந்துவிட்டது. பெட்ரோல், டீசல் வரியில் ஒன்றிய அரசுக்கே பெரும்பங்கு போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32ல் வெறும் 50 காசு மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு பிரித்து கொடுக்கிறது. மீதமுள்ள ரூ.31.50 ஒன்றிய அரசே எடுத்துக்கொள்கிறது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மானியங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்ந்ததா என்பது குறித்து விவரங்கள் இல்லை.

அந்த ஆட்சியில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படவும் இல்லை, உயர்த்தப்படவும் இல்லை. இதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியம், குடிநீர் வாரியத்துக்கு ரூ.1,743 கோடி பாக்கி வைத்துள்ளன. ஒரு அலகு மின்சாரம் வாங்கி கொண்டுதருதலில் மின்வாரியத்துக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதேபோல், போக்குவரத்துத்துறை நிர்வாகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கி.மீக்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூ.59 இழப்பு ஏற்படுகிறது. மின்சார வாரியம், போக்குவரத்து துறையின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பிறகு, செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்: எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை உலகின் எந்த அரசாங்கமும் செய்ய முடியாது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் வளர்ந்த மாநிலமாகவும், ஏற்றத்தாழ்வாகவும் உள்ளது. தற்போது வெளியிட உள்ள வரவுசெலவுத் திட்டம் 6 மாதங்களுக்கானது. பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளாக வரி உயர்த்தவில்லை என்பது உண்மை தான், அதனை சீரமைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.