Show all

நாடே திரும்பிப் பார்க்கப் போகும் தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்கள்

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும், நாட்டையே திரும்பிப் பார்க்கவைக்கும் அறிவிப்புகளில், அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பும் இடம்பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

     பள்ளிக் கல்வித் துறையில், அண்மைக்காலமாக ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக உதயச்சந்திரன் இந்திய ஆட்சிபணித்துறை நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

     தரவரிசை நடைமுறைக்கு முடிவுகட்டி, தகுதி முறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் இடம், இரண்டாம் இடம் என்ற பதற்றமின்றி, மாணவர்கள் முதன்முறையாகத் தேர்வு முடிவுகளை எதிர்கொண்டார்கள்.

     பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் வழிகாட்ட, தமிழகத்தின் முக்கியக் கல்வியாளர்கள், படைப்பாளிகள், பேராசிரியர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கிழமைதோறும் கூடி விவாதித்து கருத்துரைகளை வழங்குகிறது.

     இந்த நிலையில்தான் இன்று நாடே திரும்பிப்பார்க்கப் போகும் 41 அறிவிப்புகளை வெளியிடப் போகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன.

•அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை, அரசு பள்ளியில் பயில வைத்து முன்னோடியாக செயல்பட்டால் அவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்படும்

•ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உள்ள மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்க, உடற்கல்வி ஆசிரியர் நியமனங்கள் அதிகரிக்கப்படும்.

•உடற்கல்வி பாட நேரத்தில், கண்டிப்பாக விளையாட்டு பயிற்சிக்கு மாணவர்களை அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும்

•அரசு பள்ளிகளுக்கு, 2006 - 2007ல், வழங்கப்பட்ட கணினிகள் மாற்றப்பட்டு, நவீன கணினிகள் வழங்கி சீர்மைஆய்வகம் அமைக்கப்படும்

•அனைத்து மாணவர்களுக்கும், ரத்தப்பிரிவு, ஆதார் எண் அடங்கிய, சீர்மைஅட்டைகள் வழங்கப்படும். இதில், மாணவர்களின் நலத் திட்ட உதவிகள் பதிவு செய்யப்படும்.

•கல்வி உதவித் தொகையை, சீர்மைஅட்டை மூலம், மாணவர்கள் பெறவும் வசதி செய்யப்படும்

பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற, துணை வேந்தர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் இடம் பெறும் குழு அமைக்கப்படும்.

•நீட் தேர்வை எதிர்கொள்ள, 60 ஆயிரம் வினா - விடை தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப்படும். அவற்றை, மின்-கற்றல் முறையில், மாணவர்கள் எப்போதும் படிக்கலாம். நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

•ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், பணப் பலன்கள் பெறுவதற்கு, இயங்கலைமுறை கொண்டு வரப்படும். இதற்காக, ஐந்து பள்ளிகளுக்கு, ஒரு தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார்.

•விபத்து நேரத்தில், தரமான சிகிச்சை அளிக்க, மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு அமல்படுத்தப்படும்.

•அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்க, ஆழியாறு மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்ற, 13ஆயிரம் பேர், சம்பளமின்றி தன்னார்வலர்களாக நியமிக்கப்படுவர்.

•அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாய மாகும். இதற்கு தனியாக இணைப்பு புத்தகம் வழங்கபடும்

•ஆசிரியர்கள் ஒரே இடத்தில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, இட மாறுதல் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்

•பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

•பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இதுவரை இல்லாத வகையில், அந்தந்த மாவட்டத்திலேயே, விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்.

     இந்தத் தகவல்கள் உண்மையான அறிவிப்புகளாக வெளியாகும் பட்சத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் வீரர்களாக அமைச்சர் செங்கோட்டையனும், இந்திய ஆட்சிபணித்துறை அதிகாரி உதயச்சந்திரனும் கொண்டாடப்படுவார்கள் என்பது நிச்சயம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.