முன்னாள் உச்சநீதிமன்ற நீதிஅரசர் மார்க்கண்டேய கட்ஜூ
தனது முகநூல் பக்க பதிவில், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார விளையாட்டான சல்லிக்கட்டுக்கு
ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களின் அறவழிப்போராட்டம் நாட்டுக்கே நல்ல பாடத்தைக் கற்றுக்
கொடுத்துள்ளது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து
அவர் தனது முகநூல் பதிவில், தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். குறிப்பாக,
சல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாராட்டுக்கள். அவர்களைக் கண்டு
பெருமைப்படுகிறேன். அவர்களது வருங்காலம் சிறக்கும், வாழ்க! இந்தப்
போராட்டத்தில் மிக தலையாய அம்சமாக, பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும் சாதி,
மத எல்லைகளைத் தகர்த்து துணிச்சலுடன் உறுதியாக அறவழியில் அது மாபெரும் இயக்கமாக, அனைவரும்
பேதமில்லாமல் ஒருங்கிணைந்ததுதான் இதன் மிகப் பெரிய தலையாய அம்சம். அனைத்து நம்பிக்கைகளையும்
தவிடுபொடியாக்கி நீங்கள் மிகப் பெரிய அறவழி போராட்டத்தை நடத்திக்காட்டி வெற்றியையும்
கண்டுள்ளீர்கள். ஒட்டுமொத்த
இந்திய மக்களும் உங்களிடமிருந்து பாடம் கற்பார்கள். அவர்களுடைய வளமான வாழ்க்கைக்குத்
தடைகளை தகர்க்க உங்களை முன்னுதாரணமாக எடுத்துகொள்வார்கள். தமிழ் மக்கள் வாழ்க! என்று உணர்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும்,
மற்றொரு பதிவில் கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்கள் தங்களுடைய கலாசாரத்தில் ஒருபகுதியாக
உள்ள கம்பாலா போட்டி, எருது பந்தயம் ஆகிய போட்டிகளை நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு
வர வேண்டும் என கூறியுள்ளார். சல்லிக்கட்டுக்கு
ஆதரவாக நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில், ஒர் போராட்டகாரராக தன்னைத் தானே அறிவித்துக்
கொண்டு தொடக்கம் முதலே தமிழ்நாட்டு மக்களுக்கு பல வகையிலும் தனது முக நூல் மூலமாக,
தொலைக்காட்சி பேட்டிகள் மூலமாக, ஆலோசனைகள், கருத்துக்களை, யோசனைகளைக் கூறி கொண்டே இருந்தார்
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிஅரசர் மார்க்கண்டேய கட்ஜு என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.