Show all

ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்கத் தடை! அன்றாடம் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி, சேலம் மாநகராட்சி பகுதிகளில்

குறையாத கொரோனா தாக்கத்தின் காரணம் பற்றி, சேலம் மாநகராட்சி பகுதிகளில், மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சி பகுதியில்உள்ள கடைகள், சிறப்பு அங்காடிகள், வணிகவளாகங்கள், பூக் கடைகள் உள்ளிட்டவை அன்றாடம் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா தொற்றுப் பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டியதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123 (23.08.2021) வரை நீட்டிக்கப்படுகிறது.

அதிக அளவில் மக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும், மக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.

சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து வணிகவளாகங்கள், துகிலியல், நகைக் கடைகள், சிறப்பு அங்காடிகள்; ஆகியவை மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். மேலும், இவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட அனுமதியில்லை.

செவ்வாய்ப்பேட்டை முதன்மைச்சாலை, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி சாலை, பால் அங்காடி, லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வஉசி நாளங்காடி, சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. துணிக் கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்திய சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

கொங்கணாபுரம் மற்றும் வீரகனூர் கிழமைச்சந்தைகள் 07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123 (23.08.2021) வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மேட்டூர் அணை பூங்காவில், 07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123 (23.08.2021) வரை பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.

இறைச்சி, மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யவேண்டும். மேலும், கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கைத் தூய்மைக் கலவைகள் வைக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகமூடி அணிவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.