Show all

முழு விடுதலை! பிரிட்டன் அரசியின் தலைமையை நீக்கி குடியரசாக நாடாக மலரப்போகும் பார்படோஸ் நாடு

கரீபியத் தீவு நாடான பார்படோஸ் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல், பிரிட்டன் அரசியின் தலைமையை நீக்கி குடியரசாக நாடாக மலரப்போகிறது.

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சுமார் 2.85 லட்சம் பேரைக் கொண்ட சிறிய தீவு நாடான பார்படோஸ், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு அடிமை முறையை எதிர்கொண்டு வந்தது. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் முழுமையாக விடுதலையடைந்தது.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பார்படோஸ் நாடு, தற்போது பிரிட்டன் அரசியின் தலைமையைத் நீக்கிவிட்டு, குடியரசு நாடாக மாற இருக்கிறது. இதன்மூலம் கடந்த 396 ஆண்டுகளாக பிரிட்டனோடு இருக்கும் உடன்பாடு முடிவுக்கு வருகிறது.

விடுதலை நாடாக தன்னை அறிவித்துக் கொண்டு 55 ஆண்டுகளுக்குப் பிறகு, 396 ஆண்டுகளாக இங்கிலாந்தோடு பார்படோஸை இணைத்து வைத்திருந்த எல்லா உடன்படிக்கைகளிலிருந்தும் கிட்டத்தட்ட தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள இருக்கிறது பார்படோஸ்.

கடந்த 30 ஆண்டுகளில், அரசி இரண்டாம் எலிசபெத்தை நாட்டின் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் முதல் நாடு பார்படோஸ்தான். கடைசியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மொரீசியஸ் நாடு, தன் நாட்டின் தலைவர் பதவியிலிருந்து மகாராணி எலிசபெத்தை நீக்கியது.

இப்போதும் யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா போன்ற 15 நாடுகள் அரசி இரண்டாம் எலிசபெத்தை தங்கள் நாட்டின் அரசியாகக் கருதி மதித்து வருகின்றன.

பிரிட்டனின் அரசி இரண்டாம் எலிசபெத் தான் தற்போது பார்படோஸ் நாட்டின் தலைவராக பதவியில் உள்ளார். அவரது பேராளராக ஆளுநர் ஜெனரல் சாண்ட்ரோ மசோன் இருக்கிறார்.

நாட்டின் தலைவர் என்று பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசியை நீக்குவது குறித்து கடந்த ஆண்டிலேயே பார்படாஸ் அறிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து நாட்டின் முதல் அதிபர் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது.

இந்தத் தேர்தலில் ஆளுநராக இருந்து வரும் சாண்ட்ரோ மசோன் வெற்றி பெற்றார். வரும் கிழமையில், பேரரசி இரண்டாம் எலிசபெத்துக்கு பதிலாக, அவர் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

வரும் செவ்வாய்க் கிழமை நடக்கும் விழாவில் சாண்ட்ரோ மசோன் பார்படோஸ் நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் அந்நாட்டின் படைதுறை அணிவகுப்புகளும் அடக்கம்.

இந்த நிகழ்ச்சியில், இளவரசர் சார்லஸ் கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

பார்படோஸ் நாட்டை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய போது அங்கு மக்கள் அதிகம் வசிக்கவில்லை. புகையிலை, பருத்தி, இண்டிகோ, சர்க்கரை பயிரிட நிலம் பயன்படுத்தப்பட்டது. வெகு சில ஆண்டுகளில் பார்படோஸ் ஆங்கிலேயர்களின் முதல் லாபகரமான அடிமை சமூகங்களைக் கொண்ட பகுதியானது.

திங்கட்கிழமை மாலை, பிரிட்ஜ் நகரில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில், பார்படோஸ் குடியரசு நாடாக அறிவிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

'எங்கள் காலனி ஆதிக்க வரலாற்றை முழுமையாக கைவிடும் நேரம் வந்துவிட்டது' என பார்படோஸ் நாட்டின் தலைமை அமைச்சர் மியா மொட்டெலி கடந்த ஆண்டு ஓர் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,081.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.