Show all

ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம்! நீட் விலக்கு சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு சட்டமுன்வரைவை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு சட்டமுன்வரைவை, ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை, குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைக்க, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவானது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், எழுபத்தொன்பது நாட்களுக்கு முன்பே, சட்டப்பேரவையில் நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்டமுன்வரைவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த  சட்ட முன்வரைவு அப்போதே தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக இந்த சட்ட முன்வரைவு இன்றுவரை அனுப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

அப்போது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறும் நோக்கில், நீட் விலக்கு  சட்டமுன்வரைவை, குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்ப ஆளுநரிடம் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

இனியாவது- குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறும் நோக்கில், நீட் விலக்கு  சட்டமுன்வரைவை, குடியரசுத் தலைவருக்கு உடனடியாக ஆளுநர் அனுப்பிவைக்க வேண்டும் என்று நாமும் கேட்டுக் கொள்கிறோம். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,080.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.