Show all

அடுத்த ஆண்டு தொடர்ந்து அரசுப்பணிக்கான தேர்வுகள்! தமிழ்மொழித்தாளுக்கு அதிகாரம்

அரசு துறைகளில் காலியாக இருக்கும் 32-க்கும் அதிகமான துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு- வரும்ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தமிழ்மொழித்தாளுக்கு அதிகாரம் என்பது சிறப்புத் தகவல்.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பான ஆண்டு அட்டவணையை வெளியிடும்.

அந்தவகையில் வரும் ஆண்டுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அதன் தலைவர் பாலச்சந்திரன் நேற்று வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:- அரசு துறைகளில் காலியாக இருக்கும் 32-க்கும் அதிகமான துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு- வரும்ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறோம். 

அதன்படி குழு-2, குழு-2ஆ, பணிகளில் 5 ஆயிரத்து 831 காலி இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். அறிவிப்பு வெளியானதில் இருந்து 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும். 

இதேபோல், குழு-4 பணிகளில் 5 ஆயிரத்து 255 காலியிடங்கள் தற்போது வரை உள்ளன. இதில் கூடுதலாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இடங்கள் வரையிலும், துறைகளில் கூடுதலாக இடங்கள் வரும்பட்சத்தில் அதைவிட சற்று கூடுதலாகவும் காலியிடங்கள் சேர வாய்ப்பு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதன்பின்னர், 75 நாட்களுக்கு பிறகு தேர்வு நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசு- தமிழ்மொழித்தாள் தேர்ச்சி கட்டாயம் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. அதனைப் பின்பற்றியே இனி வரக்கூடிய தேர்வுகள் நடத்தப்படும். 

அதன்படி, குழு-4 பணிகளை பொறுத்தவரையில், பகுதி-அ பிரிவில் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வாக இருக்கும். அதில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, பகுதி-ஆ தேர்வுத்தாள் (பொது அறிவு) திருத்தப்படும். இந்த 2 மதிப்பெண்களும் தரவரிசை மதிப்பெண்ணாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

குழு-4 தேர்வு தமிழ்மொழித்தாள் 'கொள்குறி வகை'யிலும், குழு-1, குழு-1அ, குழு-1ஆ, குழு-1இ, மற்றும் குழு-2, குழு-2அ தேர்வு தமிழ்மொழித்தாள் 'விளக்க வகை'யிலும் நடக்கும். 

இந்த தேர்வு விடைத்தாள் எண்ணிம முறையில் திருத்தப்பட இருக்கிறது. குழு-1 பணிகளுக்கான முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். தற்போதைய அரசின் அறிவிப்பின்படி, புதிய நடைமுறையில் நடைபெற உள்ள தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இன்னும் ஒருகிழமையில் தயாராகிவிடும். அதனைத்தொடர்ந்து மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்படும்.

ஒளிக் குறி உணரி (ஓ.எம்.ஆர்.) விடைத்தாளுக்கு மாற்று ஏற்பாடாக கணினி வழியிலான தேர்வு நடத்த திட்டமிட்டு வருகிறோம். அதன்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துறை சார்ந்த தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தி வருகிறோம். மற்ற தேர்வுகளையும் அதேபோல் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அனைத்து தேர்வுகளுக்கும் இறுதி விடைக்குறிப்புகள், தேர்வு முடிந்து சில நாட்களிலேயே வெளியிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்போது வரையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்புகளுக்கு செல்லாது. அண்மையில் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. அந்த தேர்வுகளையும் இதே முறையை பின்பற்றி விடைத்தாள் திருத்த அறிவுறுத்தி இருக்கிறோம். உச்சஅறங்கூற்றுமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்டமாக முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.