Show all

இன்று பெரியார் 143வது பிறந்த நாள்! பெரியாரின் பிறந்த நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம்: தமிழ்நாடு அரசு

இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே காங்கிரஸ்காரர்களோடு சமூக நீதிக்காக மல்லுக்கட்டிய, தமிழ்நாட்டின் சமூக அரசியல் களத்தில், பேராற்றல் மிக்கத் தலைவராகத் கொண்டாடப்பட்டு வரும், பெரியாருக்கு, இன்று 143 ஆவது பிறந்த நாள். 

01,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் சமூக அரசியல் களத்தில், பேராற்றல் மிக்கத் தலைவராகத் கொண்டாடப்பட்டு வரும், பெரியாருக்கு, இன்று 143 ஆவது பிறந்த நாள். 

இந்தியா விடுதலை பெறுவதற்கு முந்தைய காலத்தில் காங்கிரஸ்காரராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் பெரியார். இந்திய விடுதலைக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 23 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலுமான காலம் வரை, இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் கொண்டு வர முயன்றார். 

இறுதியாக இந்திய விடுதலைக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் வகுப்புவாரி தீர்மானம் நிராகரிக்கப்பட, கட்சியை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார். 

இந்திய விடுதலைக்கு பின்பு மூன்றாண்டுகள் கழிந்த கால கட்டத்தில் இட ஒதுக்கீடானது, காங்கிரசார் உருவாக்கியிருந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என உச்சஅறங்கூற்றுமன்றமே தீர்ப்பளித்தது. 

அப்போது தொடங்கி அரசியல் சட்டத் திருத்தத்திற்காக போராடினார் பெரியார். அந்தப் போராட்டம்தான், இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு காரணமாகி, சமூகநீதிக்கான சட்டப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. சாதி அடிப்படையில் மட்டுமன்றி பாலின அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான உரிமையும், சமூக நீதியின் அங்கமே என உணர்த்தினார் பெரியார்.

இந்திய விடுதலைக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், ‘இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது’ எனக்கூறப்பட்டது.

பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு, தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடர் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணியளவில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும்.

சமூகநீதிப்போராளி பெரியார் செல்வச்செழிப்புமிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாதியப்பாகுபாட்டினை காண சகிக்காமல், சமூக நீதித்தேடி சளைக்காமல் போராடி களத்தில் அவர் பட்ட காயங்களும், அவமானங்களும் ஆயிரமாயிரம்.

இளம் அகவையில் பல்வேறு அமைப்புகளில் தலைமை ஏற்றவர் காந்தி மீது கொண்ட பற்றின் காரணமாக காங்கிரசில் இணைந்தாலும் தான் கொண்டிருந்த கொள்கை, லட்சியங்கள் ஈடேறிட வாய்ப்பில்லாது போனதால், அக்கட்சியில் இருந்து வெளியேறி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்படவும், படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து, விழிப்புணர்வு பெறமுடியும் என்பதையே தன் லட்சியமாக கொண்டு, “குடியரசு” கிழமை இதழ் தொடங்கி, சமுதாயத்தில் நிலவிவரும் வருணாசிரமத்தை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கியவர்.

மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் இவை இரண்டுமே தந்தை பெரியாரின் அடிப்படை கொள்கைகளாகவும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு இவை இரண்டும் அவரது இலக்குகளாகவும் இருந்தன என்றால் அது மிகையில்லை. அவரின் சுயமரியாதை எனும் சுயசிந்தனையால் தமிழினம் இன்று தலைநிமிர்ந்துள்ளதோடு சிந்தனை தெளிவும் பெற்றுள்ளது. விடாது அவர் இடித்துரைத்த பகுத்தறிவினாலும், விதைக்கப்பட்ட சமூக நீதி கருத்துகளாலும் தமிழ்நாடு தலை நிமிர்ந்து தன்னிறைவு பெற்று நிற்பதோடு மட்டுமின்றி இந்திய அளவிலும் ஏக்கத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையில்லை.

தந்தை பெரியாரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றுகின்ற வகையில் அறிஞர் அண்ணா 54 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக ஆட்சி பொறுப்பிலே அமர்ந்தபோது ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை’ என்று கம்பீரமாக அறிவித்தார். தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதை திருமணச்சட்டம், கலப்பு திருமணம் செய்யும் தம்பதியருக்கு தங்கப்பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தினார். அவரின் வழியில் பேரறிஞர் அண்ணாவின் அருமைத்தம்பியான தலைவர் கருணாநிதி ஆட்சிப்பொறுப்பிலே இருந்த காலத்தில் அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சரித்திரம் படைத்தார்.

குறிப்பாக, பெண்களுக்கு சம சொத்துரிமை சட்டம், பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு, பகுத்தறிவு பகலவனாம் ஈ.வே.ராமசாமிக்கு ‘பெரியார்’ என்கின்ற பட்டம் வழங்கிய டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் ஆகியோரின் பெயர் தாங்கிய திட்டங்களாம் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, கைம்பெண் மறுமண உதவித்தொகை, ஈ.வே.ரா.மணியம்மையார் ஏழை கைம்பெண் மகள் திருமண நிதியுதவி, பெரியார் கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், அனைத்து சாதியினரும் ஒன்றிணைந்து வாழும் சமத்துவபுரம் திட்டம் போன்ற பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி உள்ளார்.

திராவிட இயக்கத்தின் நீட்சியாகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதியின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகநீதியை நிலைநாட்டும் விதமாக அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகும் திட்டத்தை செயல்படுத்தியதோடு, 2 பெண் ஓதுவார்களையும் நியமித்து தந்தை பெரியாரின் கனவை நனவாக்கினார்.

தமிழ் இனத்தின் எழுச்சிக்காகவும் ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’, சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளால் ஆண்டுகள் 143 கடந்தும் இன்றும் நம்மோடும், இனி வரும் இளம்தலைமுறையினரோடும் காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சட்டமன்றத்தில், இனி ஒவ்வொரு ஆண்டும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் அவர் வாழ்ந்த நினைவு இல்லத்திலும், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள நினைவிடத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.