Show all

நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம்! ஆளுநர் ஆர்.என்.ரவி- தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட முன்வரைவை திருப்பி அனுப்பிய வகைக்கு

ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

22,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வரைவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு சட்டமுன்வரைவைத் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

நீட் விலக்கு சட்டமுன்வரைவு உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஆளுநர் தெரிவித்துள்ள விளக்கத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நீட் தேர்வை பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, நீட் சட்டமுன்வரைவு குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.

நீட் விலக்கு சட்டமுன்வரைவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தின் முடிவில், நீட் சட்டமுன்வரைவில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சியிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிடுமாறு கேட்டு, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் இருந்து உடனடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடந்த நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் கலந்து கொண்ட நிலையில், நீட் தேர்வு விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியாது என கூட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த முறை நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அறிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,149.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.